திருப்பதி தேவஸ்தான அறையில் தங்கியிருந்த சென்னை பக்தர்! பாத்ரூமில் மின்னியதால் ஊழியர் அதிர்ச்சி!
திருப்பதி: திருப்பதி திருமலையில் அறை எடுத்து தங்கியிருந்த சென்னை பக்தர் ஒருவர் குளியலறையில் தங்க செயினை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளில் பக்தர்கள் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 100 முதல் 1000, 2000 வரை வாடகைக்கு அறைகள் உள்ளன.

பக்தர்கள் அறையை எடுத்து அங்கு குளித்து முடித்துவிட்டு தங்களது உடைமைகளை வைத்துவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்வர். அங்கிருந்து மீண்டும் வந்து அறையை காலி செய்துவிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்வர் .
ஒவ்வொரு முறையும் பக்தர்கள் தங்கியிருந்த அறை சுத்தம் செய்யப்பட்டு தான் அடுத்த பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும். அந்த வகையில் ஒரு அறையில் சென்னையை சேர்ந்த அன்பு என்பவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அறையை காலி செய்ததும் அந்த அறையை தேவஸ்தான ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
அப்போது குளியல் அறையில் ஒரு ஆணியில் தங்க செயின் இருந்ததை பார்த்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதை அவருடைய மேல் அதிகாரியிடம் கொடுத்தார். இதனிடையே பாத்ரூமில் குளித்த போது செயினை மறந்துவிட்டது நினைவுக்கு வந்தது.
எப்படி செயினை பெறுவது என்ற தவிப்பில் இருந்த போது, தேவஸ்தான அதிகாரிகள் அவர் அறை எடுத்த போது கொடுத்த செல்போனை நம்பரில் தொடர்பு கொண்டு தங்க செயின் விவகாரத்தை தெரிவித்தனர்.
இந்த நகையை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததன் பேரில் அன்பு, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று ரூ 10 லட்சம் மதிப்பிலான செயினை பெற்றுக் கொண்டார். அறையை தூய்மை செய்த ஊழியருக்கும் தேவஸ்தான அதிகாரிகளுக்கும் அன்பு, நன்றித் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications