பஸ் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி.. மோதிரத்தை லாவகமாக உருவிய தொண்டர்கள்
திருப்பதி:பிரச்சாரத்தின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி ஒய் எஸ் ஷர்மிலாவின் மோதிரம் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபெற இருக்கும் ஆந்திர சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந் நிலையில் இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா பஸ் யாத்திரை மேற்கொண்டு அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
குண்டூரில் ஷர்மிளா பஸ்ஸில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட இருந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு கைகொடுத்த படி சென்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஷர்மிளா கையை பிடித்தபடி அவர் அணிந்திருந்த மோதிரத்தை பிடுங்கி சென்றுவிட்டார். கூட்டத்தில் யார் மோதிரத்தை எடுத்தார்கள் என்று தெரியாத நிலையில் அங்கிருந்து சென்றால் போதும் என்ற நிலையால் ஷர்மிளா உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.