பகீர் சம்பவம்.. வெள்ளத்தின் நடுவே சிக்கி அடித்து செல்லப்பட்ட 3 அரசு பஸ்கள்.. பலர் பலி
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் அனந்தபூர் ஆகிய ராயலசீமா மாவட்டங்களில் நவம்பர் 19ம் தேதி அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 3 ஆந்திர மாநில அரசுப் பேருந்துகள் சிக்கியதில் போக்குவரத்து ஊழியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
மேலும் ராயலசீமா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

வாட்டி வதைக்கும் மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை, வெள்ளம் என மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. மேலும் அணைகளில் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதாலும், சிலஇடங்களில் ஏரிகள், தடுப்பணைகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும் பொதுமக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கடலோர மாவட்டங்கள் தத்தளிப்பு
இரண்டாவது முறையாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று நேற்று சென்னை, புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்நிலையில் வானிலை மையம் தெரிவித்தது போலவே வடதமிழகம் மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. சென்னை, புதுச்சேரி, காரைக்கால், கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

ஆந்திராவில் மழை கைவரிசை
இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமின்றி தெற்கு ஆந்திராவில் கடலோர மாவட்டங்களான சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் அனந்தபூர் போன்ற ராயலசீமா மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலையில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

100 பேரை காணவில்லை?
மேலும் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 4 மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் காணவில்ல என்றும் அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்களை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 7 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள், காவல்துறை, வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

செய்யூர் ஆற்றில் வெள்ளம்
அன்னமய்யா அணையில் இருந்து வெளியேறும் நீரால் செய்யூர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால் ராஜாம்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், கடப்பா மாவட்டத்தின் பிற கிராமங்களிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

ஆற்றில் சிக்கிய அரசுப் பேருந்து
இதற்கிடையே ராஜம்பேட்டை தாலுக்கா ராமாபுரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் 3 பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கின. பெரும்பாலான பயணிகள் மற்றும் அரசுப் போக்குவரத்து ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர். ஆனாலும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் உள்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நீரில் மூழ்கியதில் 12 பேர் பலி
ராஜாம்பேட்டை தாலுக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் நீரில் மூழ்கி 12 பேர் இறந்து விட்டனர். 7 உடல்கள் கண்ட்லூரு அருகேயும், 3 உடல்கள் ராயவரம் அருகேயும், 2 உடல்கள் மண்டப்பள்ளி அருகேயும் கண்டெடுக்கப்பட்டன. ராஜம்பேட்டை தாலுக்காவில் மண்டப்பள்ளி, அகேபாடு மற்றும் நந்தலூர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

ரயில், பஸ் ஸ்தம்பிப்பு
திருப்பதி - கடப்பா இடையே பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் சேதமடைந்ததால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications