திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுவோர் இந்துக்களாக இருக்க வேண்டும்! புதிய அறங்காவலர் அதிரடி
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேலை செய்வோர் இந்துக்களாக இருக்க வேண்டும் என கோயில் அறங்காவலர் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இந்த குழுவில் உறுப்பினர்களாக 24 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்த சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது என் பாக்கியம். கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடத்தியதை போல் அல்லாமல் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையாகவும் உண்மையாகவும் இருக்க பாடுபடுவேன். திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.
தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு பணிக்கு மாற்றி நியமிப்பதா அல்லது கட்டாய ஓய்வு அளித்து அனுப்புவதா என மாநில அரசுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். இது என்னுடைய முதல் முயற்சியாகும். தேவஸ்தான அறக்கட்டளையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன.
எல்லாவற்றையும் தீர்க்கலாம். நான் சித்தூர் மாவட்டம். அடிக்கடி திருப்பதிக்கு போய் சுவாமி பார்ப்பேன். அப்படிப்பட்ட என்னை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ஷ்டம். கோயிலில் பணியாற்றும் மாற்று மதத்தினரை நீக்குவது என்பது சற்று சிரமமான காரியம்தான் . இருந்தாலும் இந்த முடிவை அனைவரும் ஏற்க வேண்டும்.
ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தனது புனிதத்தை இழந்துவிட்டது. வழக்கமாக திருப்பதி கோயிலுக்கு ஆண்டுக்கு 5 அல்லது 6 முறை செல்வது வழக்கம். ஆனால் ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளும் நான் திருப்பதிக்கு செல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications