சபாஷ் ஜெகன்.. ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து தீவிர ஆலோசனை.. அதிரடிக்கு ஆயத்தம்
Recommended Video
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர, புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை மற்றும் பேரவை தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பேரவை தேர்தல்களில் 151 இடங்களையும், மக்களவை தேர்தல்களில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22 இடங்களையும் கைப்பற்றியது.

வரும் வியாழனன்று விஜயவாடாவில் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்கிறார். அனுபவமிக்க பல மாநில முதல்வர்களே யோசித்து முடிவெடுக்கும் மது கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த ஜெகன் முனைப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜெகன் முதல்வர் பதவியை ஏற்ற உடனேயே, ஆந்திர அரசின் மது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
ஆந்திராவில் நடப்பு ஆண்டு முதலே மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க அவர் முடிவு செய்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஜெகன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் செயல்திட்டத்தை தயாரிக்கும் பணியை, ஜனசைத்தன்ய வேதிக என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவரான லட்சுமண ரெட்டி என்பவரிடம் ஜெகன் ஒப்படைத்துள்ளார்.
பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு, படிப்படியாக செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் முக்கிய அம்சமாக மாநிலம் முழுவதும் மதுவிற்கு அடிமையாக உள்ளவர்களுக்காக, மறுவாழ்வு மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெகன் மோன் ரெட்டியின் அதிரடி முடிவால் வரும் 2024-ம் ஆண்டிற்குள் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications