ஏழுமலையானை தரிசிக்க 7 கிமீ தூரத்துக்கு கியூ..48 மணி நேரம் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்
ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருக்கின்றனர். 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருப்பதால் விஐபி பக்தர்கள் திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவ
திருப்பதி: பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்துக்கொண்டுள்ளனர். சாமி தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆவதாகவும் சாதாரண பக்தர்களும் விஐபி பக்தர்கள் திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது எனவேதான் பக்தர்கள் அதிகம் அங்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.
திருப்பதி பெருமாளை தரிசிக்க.. கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் ரிலீஸ் - மூத்த குடிமக்களுக்கு சர்ப்ரைஸ்
திருப்பதி ஏழுமலையான் கோவில்
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். பாதயாத்திரையாக சென்று மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.
மலை எங்கும் பக்தர்கள் கூட்டம்
திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார விடுமுறை தினங்கள் என்பதாலும் திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நேற்று காலையிலேயே கோயிலுக்கு வெளியே நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் கூட்டம் வரிசையில் நின்றது. சுமார் 15 மணி நேரம் காத்திருந்து அவர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
விஐபி தரிசனம் ரத்து
சனிக்கிழமை என்பதால் நேற்று பிற்பகலுக்கு மேல் கூட்டம் மேலும் அதிகரித்ததால் தரிசனத்துக்கு 20 மணி நேரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
நடைபாதையாக வரும் பக்தர்கள்
தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக அதிக அளவில் வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 மண்டபங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று இரவு முதல் 40 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்தே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிகிறது.
7 கிலோ மீட்டர் நீள க்யூ
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 48 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே இறைவனை வழிபட முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் விஐபி பக்தர்களும், சாதாரண பக்தர்களும் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.