Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு விரையும் நந்தினி நெய்.. திருமலை தேவஸ்தானம் உடனடியாக தந்த உறுதி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க தேவையான நெய் வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் கர்நாடகா மாநில பால் கூட்டமைப்பான நந்தினிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கர்நாடகா மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் உள்ள லட்டுகளின் அசல் தரத்தை உடனடியாக மீட்டெடுப்போம் என்று உறுதியளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள உலக புகழ்பெற்ற ஏழுமலையான் வெங்கடேஷ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டு தனித்துவமான சுவை கொண்டது. திருப்பதி லட்டு போல் வேறு எந்த லட்டும் இருக்காது. இந்த லட்டுக்கு இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பக்தர்களால் புனித பிரசாதமாக கருதப்படும் இந்த லட்டு தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

tirupati laddu ghee

கடந்த புதன்கிழமை அன்று அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறி அதிரவைத்தார் . இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதை மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்தது.

இதுப்பற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமணா ரெட்டி கூறும் போது, "குஜராத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம், கடந்த ஜூலை மாதம் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் மாதிரியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு மற்றும் பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் திருப்பதி லட்டு தொடர்பான மத்திய அரசின் ஆய்வக அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க தேவையான நெய் வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் கர்நாடகா மாநில பால் கூட்டமைப்பான நந்தினிக்கு வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக திருப்பதிக்கு நந்தினி நெய் வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் நந்தினி தான், தமிழ்நாட்டின் ஆவின் போல் உள்ள நிறுவனம் ஆகும். கர்நாடகா மாநில விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலில் உருவாக்கப்பட்டுள்ள நந்தினி நெய், அம்மாநிலத்தில் புகழ் பெற்றதாகும்.

நந்தினி பிராண்ட் நெய் டன் டன்னாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் 'பொடு' என்று அழைக்கப்படும் லட்டு தயாரிக்கும் சமையலறைகளுக்கு விரைகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 73,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பதி திருமலை கோயிலின் ஒன்பது நாள் பிரம்மோத்ஸவத்திற்கு முன்னதாக தேவஸ்தான் நெய்யை சேமித்து வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 4 முதல் 12 வரை திருப்பதியில் பிரம்மோத்ஸவம் நடைபெறும் . இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான நெய்யை நந்தினியிடம் இருந்து திருப்பதி தேவஸ்தான் வாங்கி குவித்து வருகிறது.பிரம்மோத்ஸவ நிகழ்வின் போது நெய் கொள்முதல் செய்வதில் ஏதேனும் நெருக்கடி ஏற்படாதஅளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோத்ஸவ நிகழ்வின் போது, திருப்பதி கோவிலில் தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்படுவதாக, 'பொடு' சமையலறையின் பொறுப்பாளர் முனி ரத்னம் தெரிவித்தார்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் உள்ள லட்டுகளின் அசல் தரத்தை உடனடியாக மீட்டெடுப்போம் என்று உறுதியளித்துள்ளது. லட்டுகளின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் ஆகியவற்றில் இனி எந்த சமரசமும் இருக்காது" என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் இன்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் உறுதி அளித்தார். தெய்வத்திற்கு மற்ற பிரசாதங்கள் அல்லது "பிரசாதம்" தயாரிப்பதில் பசு நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை தேவஸ்தானம் சனிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

முன்னதாக க‌ர்நாடக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறும் போது,
திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட விவகாரம் அதிர்ச்சியாக உள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் நந்தினி நெய் நீண்ட காலமாக திருப்பதிலட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நந்தினி நெய்யில் எந்தவிதமான கலப்படமும் இல்லைஎன ஆந்திர மாநில அதிகாரிகளே தெரிவித்துள்ளனர் என்றார்.

மேலும் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஆயிரத்து 500 கோயில்களிலும் பிரசாதம் தயாரிப்பதற்கும், விளக்கு ஏற்றுவதற்கும், இதர சடங்குகளுக்கும் கர்நாடக அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+