திருப்பதியில் பாலய்யா ரசிகர்கள் செய்த காரியம்.. நடவடிக்கையில் இறங்கிய காவல் துறை
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதியில் தியேட்டரின் வெளியே ஆட்டை பலி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சிலர் மீது திருப்பதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
பொதுவாக தங்களுக்குப் பிடித்த நடிகரின் படம் ரீலிஸாகிறது என்றாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். நடிகருக்கு பெரிய அளவிலான கட் அவுட்டுகள், பிளக்ஸ் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, தேங்காய் உடைப்பது, பட்டாசு வெடிப்பது, மேளதாளம் முழங்க நடனமாடிக் கொண்டாடுவது என கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது.

இதுபோன்ற விஷயங்கள் ஒரு சில சமயங்களில் ஆபத்தில் முடிவதும் உண்டு. தங்களுக்கு பிடித்த நடிகர் என்பதற்காக புதுமையாக ஏதாவது செய்து கவனத்தை ஈர்க்கின்றோம் என்ற பெயரில் சிலர் உச்சகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உண்டு.
அந்த வகையில், திருப்பதியில் தியேட்டரின் வெளியே நடிகர் பாலய்யாவின் ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சிலர் மீது திருப்பதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள டாடா நகரில் பிரதாப் என்ற தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டரின் வெளியே நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சிலர் மீது ஆடு பலி கொடுத்ததாக திருப்பதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சங்கராந்தியை ஒட்டி, நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலய்யாவின் டக்கு மகாராஜ் திரைப்படம் கடந்த வாரம் ஜனவரி 12ம் தேதியன்று ரிலீஸானது. பட ரிலீஸைக் கொண்டாடும் வகையில் பாலய்யா ரசிகர்கள் சிலர் ஜனவரி 12ம் தேதி அதிகாலையிலேயே பிரதாப் திரையரங்கின் வெளியே ஆடு ஒன்றை பலி கொடுத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, PETA அமைப்பினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், ஆந்திராவில் விலங்குகள் மற்றும் பறவைகளை தடை செய்யப்பட்ட வகையில் பலி கொடுப்பது மற்றும் விலங்குகள் மீது வன்முறை தாக்குதலை நிகழ்த்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து, திருப்பதி டிஎஸ்பி வெங்கட நாராயணா கூறுகையில், இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியேட்டர் முன்பு அதிகாலை 3:30 மணியளவில் பாலய்யாவின் ரசிகர்கள் ஆட்டை பலிகொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. போலீஸாரும் சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications