திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் என்றால் என்ன: மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுவது வழக்கம். உலகம் எங்கும் உள்ள திருமாலின் வைணவ தலங்களில் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். முதல் நாள் அதிகாலையில் உறங்காமல் திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வார்கள். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவார்கள்.

புராணங்களின் படி, திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும், இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகிறார்கள். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறப்பு மிக்க நாளில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்கள் இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு கோவில்களில் திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக பெருமாளை தரிசித்தார்கள். உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.இந்த கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை இன்று தரிசிக்க ஆர்வமுடன் சென்றுள்ளார்கள்.
புரோட்டோகால் தரிசனம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. சர்வ தரிசனம் 8 மணிக்கும் தொடங்கும். அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ தேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி தங்க ரதத்தில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் செய்யவிருக்கிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து பெருமாள் எழுந்தருளினார். ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்தனர்.
இதேபோல் மிகவும் பழமையான வைணவ தலமான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி உலா புறப்பாடு நடைபெறும். ஜனவரிடி 20-ம் தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஜனவரி 11-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய 2 நாட்கள் காலையும், 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 7 நாட்கள் மாலை 4.15 மணிக்கும் பரமபத வாசல் சேவை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications