திருப்பதி போறீங்களா.. இனி மறந்தும் செய்யக்கூடாதவை.. வாகனங்களில் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
திருப்பதி: திருப்பதி போக போறீங்களா.. இனி மறக்கமா இதை எல்லாம் கண்டிப்பாக பின்பற்றுங்கள், தகுதி சான்றிதழ் இருந்தால் தான் வாகனங்கள் மலைமேல் போக முடியும். திருப்பதி டூ திருமலைக்கு செல்ல வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மலைசாலையில் எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து சரியான புரிதல்கள் இல்லாமல் திருமலைக்கு போவதால் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. மலை சாலையில் வாகனம் ஓட்டுவது வேறு, சாதாரண சாலைகளில் வாகனம் ஓட்டுவது வேறு, இதை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக வாகனத்தை அதிகவேகமாக ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பக்தர்கள் காயம் அடைந்து வருகிறார்கள்.

இதையடுத்து, திருப்பதி கூடுதல் எஸ்பி முனி ராமய்யா தலைமையில் திருமலை போக்குவரத்து போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து மலைப்பாதையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு கூடுதல் எஸ்.பி. முனி ராமய்யா செய்தியாளர்களை சந்தித்தார். காவல்துறை இனி திருப்பதி செல்வோருக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், அந்த கட்டுப்பாடுக எதனால் விதிக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்,.
திருப்பதி கூடுதல் எஸ்பி முனி ராமய்யா கூறுகையில், "திருமலை மலைப்பாதையில் நாள்தோறும் அரசு பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தவிர்த்து கார் மற்றும் இதர வாகனங்கள் என 20 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், முதலாவது மலைப்பாதையான திருமலையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் மலைப்பாதை 17 கிலோமீட்டர் நீளம் உடையது. ஆனால் இதில் 63 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. அவற்றில் சில வளைவுகள் அபாயகரமானவை ஆகும்
இரண்டாவது மலைப்பாதையான திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை சாலை, 18 கிலோமீட்டர் தூரம் உடையது. இதில் ஆறு வளைவுகள் மட்டுமே இருக்கின்றன இந்த திருப்பதி முதல் திருமலை சாலை மலைச்சாலை என்பது குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றன. டெம்போ ட்ராவலர் மற்றும் துபான் என அழைக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து இங்கு விபத்துக்குள்ளாகி வருகின்றன.
திருப்பதி திருமலை சாலையில் விபத்துகள் நடக்க வாகன ஓட்டிகள் தகுதி இல்லாத வாகனங்களை கொண்டு வருவதும் மலைப்பாதையில் ஓட்டுவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அலட்சியமாக வாகனங்கள் ஓட்டுவது போன்றவை முக்கிய காரணம் ஆகும். இது மட்டுமல்லாமல் மலைப்பாதையில் ஆங்காங்கே சிலர் வாகனங்களை நிறுத்தி செல்ஃபி மற்றும் போட்டோ எடுக்கிறார்கள். இதுவும் விபத்து நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மலைப்பாதையில் செல்வதற்கான வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதேபோல் மலைப்பாதையில் பாதி வழியில் வாகனங்களை நிறுத்தவேண்டாமென அறிவுறுத்துகிறோம். வாகனத்திற்கு உண்டான இருக்கை எண்ணிக்கை மிகாமல் பயணிகள் இருக்க வேண்டும். வாகனங்களின் இருக்கைகள் மேல் பயணிகள் இருக்கக்கூடாது.
நீண்ட தூரத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் அவர்கள் தரிசன டிக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்து கொண்டு வருகிறதார்கள். அவர்கள் நேரடியாக வந்து சுவாமி பாலாஜியை தரிசனம் செய்து உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு புறப்படுகிறார்கள். இதனால் டிரைவர்களுக்கு சரியான தூக்கம் கிடைப்பதில்லை. அதனாலும் ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே டிரைவருக்கும் உரிய ஓய்வளித்து அதன் பிறகு செல்ல வேண்டும் என பயணிகளை அறிவுறுத்துகிறோம்
மலைப்பாதை சாலையில் விபத்துக்கள் நடக்கும் இடங்களை நாங்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேகக்கட்டுப்பாடு மீண்டும் அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு 40 நிமிடங்களும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மலைப்பாதையில் வேகமாக ஓட்டி வரக்கூடிய வாகனங்கள் திருமலைக்கு மீண்டும் வராத வகையில் தடை விதிக்கப்படும். அத்துடன் அந்த வாகனத்திற்கு அபராதமும் வசூலிக்கப்படும்.
இனி அலிபிரி சோதனைச் சாவடி அருகே போக்குவரத்துத் துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் இணைந்து வாகனங்கள் மலைப்பாதை சாலையில் செல்வதற்காக பிட்னஸ் சான்றிதழ் பெற்றுள்ளதா என ஆய்வு செய்த பின்னரே மலைப்பாதையில் பயணிக்க அனுமதிப்பார்கள். இந்த நடைமுறையும் விரைவில் கொண்டு வரப்போகிறோம்.
திருப்பதி திருமலை மலைப் பாதையில் வாகன ஓட்டிகள், தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம். வெளியூரிலிருந்து வரக்கூடியவர்களே இப்படி முந்திச் செல்ல முயல்கின்றனர். மலைப்பாதை சாலையின் தன்மை அறியாமல் இப்படி முந்திச்செல்லும் அவர்கள், சில வளைவுகளிலேயே பயந்துவிடுகிறார்கள். இதனால் வாகனத்தை பாதிவழியிலேயே அவர்கள் நிறுத்தி விடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை முந்தி செல்வதை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்" இவ்வாறு திருப்பதி கூடுதல் எஸ்பி முனி ராமய்யா கூறினார்.












Click it and Unblock the Notifications