ஒரே நாளில் மாறிப்போச்சு.. ஸ்பெஷல் கார்.. ஸ்பெஷல் பாதுகாப்பு.. ஸ்பெஷல் லட்டு.. ரெட்டிகாருக்குதான்!
திருப்பதி: ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏழுமலையான் கோவில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆந்திராவின் அடுத்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்க இருக்கிறார்.
வரும் 30ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ளார். சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஜெகன் மோகனுக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இசட் பிரிவு பாதுகாப்பு
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அதி நவீனபாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்களையும் இசட் பிரிவு பாதுகாப்பையும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

உயர் அதிகாரிகள்
இந்த நிலையில் ஆந்திர தலை நகர் அமராவதி அருகே இருக்கும் தாடேபள்ளியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி வீட்டிற்கு ஆந்திர உயர் அதிகாரிகள் இன்று காலை முதல் சென்று அவரை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

திருப்பதி தேவஸ்தானம்
அதன் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு ஆகியோர் தேவஸ்தான அர்ச்சகர் குழுவுடன் தாடேபள்ளிக்கு சென்று ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர்.

திருப்பதி பிரசாதம்
அப்போது ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சேஷவஸ்திரத்தை அதிகாரிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அணிவித்தனர். தொடர்ந்து ஏழுமலையான் கோவில் தீர்த்தப்பிரசாதங்களை அதிகாரிகள் வழங்கினர். பின்னர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேவஸ்தான வேதபண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.












Click it and Unblock the Notifications