பெருமாள் பக்தர்களுக்கு அலர்ட்.. திருப்பதியில் இன்று முதல் செப்டம்பர் வரை வருகிறது புதிய கட்டுப்பாடு
திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு செப்டம்பர் மாதம் வரை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் குட்டிகளை ஈனும் காலம் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் மலைப்பாதை படிக்கட்டுகள் வழியாக நடந்தும், மலைப்பாதை சாலை வழியாக வாகனங்களில் பயணித்தும் செல்கின்றனர். இந்நிலையில், திருப்பதி மலைப் பாதையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வனவிலங்குகளில் இனப்பெருக்க காலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் என்பதால் இரவு நேரங்களில் திருப்பதி மலைப் பாதையில் விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். வனவிலங்குகள் குட்டிகளுடன் வேட்டைக்குச் செல்வது, குட்டிகளை தூக்கிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும். எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திருப்பதி மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் காலை 6 மணிக்கு முன்னதாகவோ, இரவு 9 மணிக்குப் பின்னரோ இருசக்கர வாகனங்களில் திருப்பதி மலைப் பாதையில் பக்தர்கள் பயணிக்க அனுமதி இல்லை என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications