திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு விவகாரம்! நடந்தது என்ன? திருமலை தேவஸ்தானம் பரபரப்பு விளக்கம்
திருப்பதி: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டுவின் தரம் குறைந்தது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தோம். நெய் விநியோகம் செய்பவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தோம்.

நெய் விநியோகம் செய்யும் ஏ.ஆர். டைரி புட்ஸ் நிறுவனத்தை தடை செய்யப்பட்ட பட்டியலில் வைத்துள்ளோம். இவ்வாறு ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் லட்டு பிரசாதத்தில் கலக்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கையை கேட்டுள்ளது. அந்த அறிக்கையை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் லட்டில் விலங்குகளின் கொழுப்புகளை கலந்து மகாபாவம் செய்துவிட்டார்கள் என திருப்பதி கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்த்து மகாபாவம் செய்துவிட்டார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டின் தரம் மற்றும் சுவை குறித்து புகார் அளித்தும் தேவஸ்தானம் நடடிக்கை எடுக்கவில்லை. என்னுடன் பணிபுரிந்தோரும் இதை கண்டுக் கொள்ளவே இல்லை. இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த லட்டு விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி விஷயத்தில் இது போல் கோல்மால் செய்யலாமா என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லட்டில் மாட்டு கொழுப்பு மட்டுமில்லாமல் பன்றிக் கொழுப்பு, மீன் கொழுப்பையும் சேர்த்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு காரணம் நந்தினி நெய்யின் விலை உயர்வால் தேவஸ்தானம் அந்த நிறுவன நெய்யை விட்டுவிட்டு வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்துள்ளது.
தற்போது அந்த நிறுவனங்களில் ஒன்றான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டைரி ஃபுட்ஸ் நிறுவனத்தை தேவஸ்தானம் பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கூறியிருப்பதாவது: மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகிய இரண்டுமே திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது என்னை போன்ற கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்களுக்கு மிகவும் அதிர்ச்சியான சம்பவம்.
இது போன்ற குற்றச்சாட்டுகள் வெளியே வரும் போது மனம் வேதனை அடைகிறது. உண்மை வெளியே வந்தால் நலமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications