ஏழுமலையானை தரிசிக்க குவியும் கூட்டம்..2 மாதத்தில் ரூ.250 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதத்தில் ரூ.250 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதத்தில் ரூ.250 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்தால் எத்தனை துன்பங்களும் நீங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருப்பதி சென்று வந்தாலே வாழ்க்கையில் திருப்பம் வரும் என்ற நம்பிக்கையில்தான் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அனுமதிக்கப்படாமல் இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக தரிசன செய்ய முடியாத பக்தர்கள் தற்போது சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
அடேங்கப்பா.. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை..அள்ளித்தந்த நெல்லை பக்தர்கள்
சாமி தரிசனம்
விடுமுறை காலமாக இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்றும் பல மணி நேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 லட்சம் பக்தர்களும், மே மாதத்தில் 22 லட்சம் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.
உண்டியல் காணிக்கை வசூல்
சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.127 கோடியும், மே மாதத்தில் ரூ.123 கோடியும் என மொத்தம் ரூ.250 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இது தவிர பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
காணிக்கை செலுத்தும் பக்தர்கள்
தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்களை தவிர, தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
ஏழுமலையான் கோவில் வருமானம்
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இந்த வருமானம் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.