வைகுண்ட ஏகாதசிக்கு ஏழுமலையானை தரிசிக்க போறீங்க - இன்று இலவச ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும்.
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக, தேவஸ்தானம் ஆன்லைனில் புக் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதம் 1ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை உள்ள நாட்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 20,000 என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி 2ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மற்றும் 23ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆகிய நாட்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளொன்றிற்கு 12000 என்ற எண்ணிக்கையிலும் கடந்த வாரம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு இலவச தரிசன டோக்கன் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. காலை 9 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி : நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள் - பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும். எனவே அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மற்றும் இதர வேலையாக திருமலைக்கு வருவோர் அலிபிரி சோதனைச்சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். மேற்கண்ட சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்லவும், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இன்று காலை 9 மணி முதல் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை திருப்பதி மலையில் உள்ள கவுண்டர்களில் மட்டுமே தங்கும் அறைகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.