திருப்பதியில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா ! மாட வீதிகளில் ஒலித்த கோவிந்தா கோஷம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். கருட சேவையை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்காக 80 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாதம் நவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில்கள், மலை பாதைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மின் விளக்குகளாலும் சுவாமி பேனர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5ஆம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் காட்சியளித்த உற்சவர் மலையப்ப சுவாமி, மாலை தங்க கருட வாகனத்தில் உலா வந்தார். இந்த நிகழ்வை மாட வீதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்து கோவிந்தா கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக 80 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுவது என்பது விசேஷமானது. பெருமாள் கோயில்களில் கருடனை வழிபட்ட பிறகு தாயாரை வழிபட்டு அதன் பிறகு கடைசியாகத்தான் பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோயில்களில் எப்படி நந்தியிடம் முதலில் நம் வேண்டுதலை வைத்தால் அது நிறைவேறும் என நினைக்கிறோமோ அது போல்தான் கருடனிடம் வைக்கும் கோரிக்கைகள் பெருமாளின் கவனத்திற்கு சென்று நமக்கு அருள் கிடைக்கும்.
பெருமாளின் முழு அருளை பெற்றவர் கருடன் என்பதால் அவர் மீது பெருமாள் உலா வருவது மிகவும் சிறப்பானது. இந்த கருட சேவை உற்சவம் தொடங்கியது திருமலை திருப்பதியில்தான். அதன் பின்னர்தான் மற்ற பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு கருட சேவை உற்சவம் நடத்தப்படுகிறது.
கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்டவை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதிக்கு வந்து சேர்ந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள மூலவர் வடபத்ரசாயி எனும் பெரிய பெருமாளுக்கு தினமும் பூஜை செய்யப்படும். இந்த வழிபாட்டின்போது ஆண்டாள் சூடிய மாலையையே பெருமாள் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காசிப முனிவரின் இரு மனைவிகளுக்கு இடைய நடந்த ஒரு போட்டியில் கருடனின் தாய் மற்றவர்களுக்கு அடிமையாகிறார். மகாவிஷ்ணுவை நோக்கி கருடன் கடும் தவம் மேற்கொண்டதன் விளைவாக பெருமாளின் கருணை கிடைக்கப் பெற்று மகாவிஷ்ணுவை எப்போதும் சுமக்கும் பாக்கியத்தை கருடன் பெற்றார்.
அத்துடன் தனது தாயையும் அடிமை வாழ்வில் இருந்து மீட்கிறார். இந்த கருட சேவையை தரிசனம் செய்பவர்களை தீய சக்திகள் ஏதும் அண்டாது என்பது ஐதீகம். மேலும் பாவங்களும் நீங்கிவிடும். பெருமாளுக்கு சேவை செய்ய கருடன் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதால் அவர் ஆழ்வார்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
கருடனை வணங்கினால் தோல் நோய், விஷ பூச்சிகளால் ஏற்படும் நோய்கள் நம்மை நெருங்காது. கருடனை வழிபட்டால் நாக தோஷம் நீங்கும். கருடனை விளக்கேற்றி வழிபட்டால் அவர்களுக்கு பெருமாளே தேடி வந்து அருளாசி வழங்குவார் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications