கோவிந்தா.. கோவிந்தா .. அய்யோ பாம்பு.. ஓடு ஓடு.. திருப்பதியில் தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்!
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் வரிசையில் பாம்பு புகுந்ததால் அலறியடித்து ஓடினர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாகனம் மூலமாக மட்டுமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளின் வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருமலைக்கு வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாவே இருந்தது. ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வரிசை 2 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் நகர்ந்து கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில், திடீரென ஏழு அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக பாம்பு பிடிப்பவரை வரவழைத்து அந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் அதிகாரிகள் விடச் செய்தனர். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், அது போல், பாம்பை பார்த்து, பக்தர்களும் சற்று ஆடித்தான் போகினர்.
இதே போல், சில தினங்களுக்கு முன்பு, வம்சி என்பவர் தனது மனைவி, மகளுடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இரண்டாவது மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை வம்சியின் மனைவி மற்றும் மகள் மீது பாய்ந்து தாக்கியது.
இதில், இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவரும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து இரண்டாவது மலை பாதையில் வாகன ஓட்டிகள் தனியாக செல்ல வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications