லட்டில் மாட்டு கொழுப்பால் தோஷம்..6 மணிக்கு விளக்கேற்றனும்! தேவஸ்தானம் கோரிக்கை.. மந்திரம் முக்கியம்!
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான கோவிலில் பக்தர்கள் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கான நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் எனவும், குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமென திருப்பதி திருமலை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் என கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
தொடர்ந்து லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதற்கு பரிகாரம் செய்யும் வகையிலும் பக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பதி திருமலை கோவிலில் சாந்தி யாகம் நடத்தப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதை அடுத்து இன்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை சாந்தி யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏழுமலையான் கோவில் பிரசாத தயாரிப்பு கூடம், லட்டு விநியோக கவுண்டர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நாட்டு பசுவின் கோமியம் கலந்த பஞ்சகவ்யம் தெளிக்கப்பட்டு குங்கிலிய புகை காட்டப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்டவற்றிம் மிருக கொழுப்பு கலந்திருந்ததால் தோஷம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம் நடத்தப்பட்டு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் இன்று மாலை தங்கள் வீடுகளில் விளக்கினி ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மாலை 6:00 மணிக்கு வீடுகளில் நெய் அல்லது விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கை ஏற்றி 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications