பிப்ரவரி மாசம் திருப்பதிக்கு போக பிளானா? நவ.24 இல் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியாகாதாமே!
திருப்பதி: பிப்ரவரி மாதம் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான சிறப்பு ரூ 300 தரிசன டிக்கெட் முன் பதிவு வழக்கம் போல் 24ஆம் தேதி வெளியிடப்படாது. அதற்கு பதிலாக 25 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே தேவஸ்தானத்தின் இணையதளம் அல்லது செயலியை கொண்டு பக்தர்கள் முன் பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு என்பது அவசியம். இதில் ரூ300 சிறப்பு தரிசனம், சேவா டிக்கெட்டுகள், அங்கபிரதட்சணம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம் உள்ளிட்டவை அடங்கும்.

நாள்தோறும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சாமானிய பக்தர்களும் எந்த நெரிசலும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யவும் இந்த முன்பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்டவைகளுக்கான டிக்கெட்டுகளை நேற்று தேவஸ்தானம் வெளியிட்டது.
அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை 100லிருந்து 200 ஆக உயர்த்தியுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாளை காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண சேவைக்கும் 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவைக்கும் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்குமான ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியாகிறது.
அது போல் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியாகிறது. பிற்பகல் 3 மணிக்கு தேவஸ்தான விடுதிகளில் தங்குவதற்கான முன் பதிவு தொடங்குகிறது. பக்தர்கள் ttdevasthanams.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்துமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏழுமலையானை ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி தரிசிக்கும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் ரேணிகுண்டா விமான நிலையத்தில் வழங்கப்படுகிறது. இதன் எண்ணிக்கையை தேவஸ்தானம் (இன்று) முதல் உயர்த்தியுள்ளது. திருமலையில் கோகுலம் விடுதியின் பின்புறம் தினமும் நேரடியாக வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட் எண்ணிக்கையை 900 இல் இருந்து 800 ஆக குறைத்துள்ளது.












Click it and Unblock the Notifications