தாராபுரத்தில் ஷாக்.. தனியார் பள்ளியில் 15 மாணவர்களுக்கு கொரோனா.. கட்டுப்பாடுகளை மீறி எப்படி பரவியது?
திருப்பூர்: தாராபுரத்தில் தனியார் பள்ளியில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிக்கு ஒரு வாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சளி மற்றும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தினசரி கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை
அதே போன்று அரசு மருத்துவமனை சுகாதார துறையினரும் வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், நவீன் மற்றும் மருத்துவ குழுவினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் தினசரி 500 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் இரத்தம்,சளி மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி
அதன் முடிவுகள் வந்தன. அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசோதனையில் 23 பேர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த 27-ந் தேதி பிரபல தனியார் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக முடிவுகள் வெளிவந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் கோரிக்கை
தனியார் பள்ளியில் முறையான சமூக இடைவெளி மற்றும் கைகளுக்கு கிருமிநாசினி பயன்படுத்தாததுதான் இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அந்த பள்ளிக்கு உடனடியாக மாவட்ட சுகாதார துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து பரவாமல் குடும்பத்தினரை 15 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வகை உருமாறிய கொரோனா
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசான ஓமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தாராபுரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications