திருப்பூர் அருகே பயங்கரம்.. 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அவர் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நிலையில் பிரச்சனை ஏற்படவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்தச் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில், வீட்டுக்கு அருகே இருக்கும் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்தச் சிறுமியை, அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் உடுமலையைச் சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) ஆகிய 6 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் 14, 15, 16 வயது கொண்ட சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் சிறுவர்கள் 3 பேரையும் திருப்பூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 6 பேரையும் கோவை மத்திய சிறையிலும் அடைத்துள்ளனர். மைனர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications