தம்பி ரயில் கிட்ட வந்திடுச்சு.. அய்யோ இப்படியா நடக்கனும்.. திருப்பூரில் இளைஞர்கள் செயலால் அதிர்ச்சி
திருப்பூர்: ரயில் அருகில் வரும் போது அந்த நொடியில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, திருப்பூரில் தண்டவாளத்தில் இரண்டு இளைஞர்கள் செய்த செயல், அவர்களின் உயிரையே பறித்துள்ளது.
மது அருந்துவது உடல் நலத்தை பாதிக்கும் என்று எப்படி எச்சரிக்கை வாசகம் வைக்கிறார்களா, அதுபோல், ஓடும் ரயில்களில் ஏறி செல்ஃபி எடுப்பதோ, ரயில் தண்டவாளங்களில் செல்ஃபி எடுப்பதோ உயிரை பறிக்கும் என்று ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் எச்சரிக்கை வாசகம் வைக்க வேண்டிய நிலை இன்றைக்கு வந்துள்ளது.

பலரும் ரயில்களில் தொங்கியபடி செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது அதிகரித்துள்ளது. லைக்கிற்கு ஆசைப்பட்டு சிலர் சாகசம் செய்த படி ரயிலில் செல்பி எடுத்து உயிரையே விட்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர் ரயில் தண்டவாளங்களில் ரயிலுக்கு முன்பு செல்ஃபி எடுத்து உயிரை விட்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் திருப்பூரில் நேற்று நடந்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றால் விருப்பமான இடங்களுக்கு செல்லலாம். விரும்பியதை சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருக்கலாம். அதை விட்டு விட்டு விபரீத முயற்சியில் இறங்கினால் பெரிய அசம்பாவிதமே நடந்துவிடும். திருப்பூர் இளைஞர்களுக்கு நேற்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே 22 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்கள்.
செல்ஃபி முயற்சி: ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரயில் வரும்போது ரயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்ற விபரீதமான முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளார்கள்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இருவரும் ரயில் நெருங்கி வரும் வரை காத்திருந்து செல்ஃபி எடுத்தபடி இருந்தனர். ஆனால் பிலாஸ்பூர் ரயில் வேகமாக ஹாரன் அடித்தபடியே வந்து இருவர் மீதும் பயரங்கர வேகத்தில் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விசாரணையில் இந்த தகவலை அறிந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். செல்ஃபி ஆசை விபரீதத்தில் முடிந்திருப்பது திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications