திருப்பூர் கோர விபத்து.. காரில் இருந்த 5 பேரும் பலி! சிதைந்த வாகனங்கள் - சிதறி கிடந்த உடல்கள்
திருப்பூர்: கடந்த 3 நாட்களுக்கு முன் தனியார் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி கடந்த 4 ஆம் தேதி ஐந்து பேர் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர்.
அந்த கார் கொடுவாய் காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்த போது திடீரென ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.

சம்பவ இடத்தில் மூவர் பலி
அந்த சமயம் திருப்பூரில் இருந்து பழனி நோக்கி காருக்கு எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதியது. காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோது பெரும் சத்தம் ஏற்பட்டு உள்ளது. இதனை கேட்டு அருகில் இருந்த மக்கள், ஓடோடி வந்து பார்த்தபோது காரில் பயணித்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்தனர்.

கோர விபத்து
5 பேர் சென்ற கார் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தின் முன் பக்கம் கடுமையாக சேதமடைந்தது. வாகனங்களின் உதிரி பாகங்கள் ஆங்காங்கே சாலையில் சிதறிக்கிடந்தன. காரில் பயணித்தவர்களும் விபத்து ஏற்பட்டவுடன் தூக்கி வீசப்பட்டு சாலையில் கிடந்தனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் காண்போரை பதைபதைக்க செய்துள்ளன.

உயர்ந்த பலி எண்ணிக்கை
விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், படுகாயமடைந்த மகேஷ் மற்றும் கிஷோர் ஆகியோரை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் இன்று உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை
விபத்தில் உயிரிழந்த வீரக்குமார், முருகேசன் மற்றும் சஜித் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து ஊதியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளர்.












Click it and Unblock the Notifications