திருப்பூர் போலீசுக்கு 4 வருடங்களாக உதவி வந்த 'வெள்ளையன்' நாய்.. கண்ணீருடன் போலீஸ் செய்த மரியாதை
திருப்பூர்: திருப்பூர் போலீஸை கலங்க வைத்த வெள்ளையன்.. நான்கு ஆண்டுகளாக போக்குவரத்து போலீசாருக்கு உதவி வந்த நாய் இறந்து போனது. அந்த நாயின் உடலுக்கு போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சியில் போலீசாருக்கு உதவியாக ஒரு நாய் இருந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம் காவல் நிலையத்தில் சுற்றி வந்த நாய் மீது அன்பு காட்டி வளர்த்த போலீசார், அதனை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

திருப்பூரை பொறுத்தவரை பழைய பேருந்து நிலையம் பகுதி தான் சிக்கலான பகுதி. புது மார்க்கெட் வீதி, மங்கலம் சாலை, பூங்கா சாலை, பெருமாள் கோவில் வீதி என நான்கு முக்கிய பகுதிகளை கொண்டது. திருப்பூரில் கடும் போக்குவரத்து உள்ள பகுதி என்றால் அது பழைய பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதிகள் தான்
இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் போக்குவரத்தை கண்காணிக்க புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பணியாற்றி வந்துள்ளார்கள். இந்த பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி நாய் ஒன்று புறக்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளது. அந்த நாய்க்கு அன்பு காட்டிய போலீசார் தினந்தோறும் அதற்கு உணவு வழங்கி வந்துள்ளார்கள்.
போலீசார் அந்த நாய் குட்டியை வெள்ளையன் என்று பெயர் வைத்து அழைத்து வந்தனர். தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளையன் காவல் நிலையத்தில் வளர்ந்தது.எப்போதுமே போலீசாருடன் தான் வெள்ளையன் சுற்றி வரும். போக்குவரத்து சிக்னலில் யாராவது போலீசாரை எதிர்த்து பேசினாலோ, போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் போலீசாரிடம் சண்டை போட்டால் அவர்களை கண்டிப்பாக ஒரு வழி செய்துவிடுமாம்.
திருப்பூரில் போலீசாருக்கு உதவியாக அவர்களுடனேயே சுற்றி திரிந்து வந்த நிலையில், சிக்னல் பணிக்கு வரும் போலீசார், புறக்காவல் நிலைய பணிக்கு வரும் போலீசாருக்கு வெள்ளையன் மீது தனி பாசம் இருந்து. சில மாதம் முன்பு வெள்ளையனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் இருக்கிறது. இந்நிலையில் வெள்ளையனை காப்பாற்ற உதவி கமிஷ்னர் முதல் காவலர்கள் வரை பணம் செலவழித்து காப்பாற்ற முயன்றுள்ளார்கள். ஆனால் உடல் நிலை சரியில்லாமலேயே இருந்துள்ளது. இந்நிலையில் இன்று வாகனம் ஒன்று வெள்ளையன் மீது மோதியதில் அது பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த போலீசார் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளாக தங்களுடன் இருந்த வெள்ளையன் இல்லாததால் சோகமடைந்த போலீசார் அதற்கு இறுதி மரியாதை செய்தனர். புறக்காவல் நிலையம் அருகிலேயே குழி தோண்டி வெள்ளையன் உடலுக்கு இறுதி மரியாதை செய்து அடக்கமும் செய்தார்கள்.இதை கேட்டு திருப்பூர் மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications