மத்திய பட்ஜெட்டில் திருப்பூருக்கு ஜாக்பாட்.. அமெரிக்காவின் பிரச்சனைக்கு வருகிறது சூப்பர் தீர்வு
திருப்பூர்: அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் நெருக்கடியில் இருக்கும் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 'ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம்' ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பூருக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்த விரிவான பின்னணி தகவல்களை பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்திய ஜவுளிப் பொருட்கள் மீது அதிரடியாக 50% இறக்குமதி வரியை விதித்துள்ளதால், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி வர்த்தகம் செய்யும் திருப்பூரில், அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கும் பல நூறு நிறுவனங்கள் ஆர்டர்கள் இன்றி தவிக்கின்றன.

இந்தச் சூழலில், மத்திய அரசின் புதிய 5 அம்ச ஒருங்கிணைந்த திட்டம் திருப்பூருக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
தேசிய இழைத் திட்டம்
திருப்பூர் இதுவரை பருத்தி ஆடைகளையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், உலகச் சந்தையில் தற்போது செயற்கை இழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பட்டு, கம்பளி மற்றும் நவீன கால 'தொழில்நுட்ப இழைகள்' உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். பருத்தி விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படும் திருப்பூர் உற்பத்தியாளர்கள், இனி குறைவான விலையில் தரமான செயற்கை இழைகளை உள்நாட்டிலேயே பெற்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் போட்டி விலையில் ஆடைகளை அனுப்ப முடியும்.
ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம்
திருப்பூரில் உள்ள பெரும்பாலானவை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். பழைய இயந்திரங்களால் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதும் அமெரிக்கப் போட்டியச் சமாளிக்க முடியாததற்கு ஒரு காரணம்.
மூலதன உதவி
நவீன இயந்திரங்கள் வாங்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அரசு நேரடியாக நிதி உதவி வழங்குகிறது. சான்றிதழ் மையங்கள்: பொதுவான சோதனை மற்றும் தரச் சான்றிதழ் மையங்கள் அமைக்கப்படுவதால், சர்வதேச தரத்திலான ஆடைகளைத் திருப்பூரிலேயே பரிசோதித்து 'ஏற்றுமதிக்குத் தயார்' என முத்திரை குத்த முடியும். இது அமெரிக்க வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உதவும்.
அமெரிக்க வரியைச் சமாளிக்கும் வியூகம்
அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால், திருப்பூரின் ஒரு ஆடையின் விலை 10 டாலரிலிருந்து 16 டாலராக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட, உற்பத்திச் செலவு குறைக்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்கள் மூலம் உற்பத்திச் செலவு குறையும் போது, வரி விதிப்பையும் மீறி இந்திய ஆடைகள் உலகச் சந்தையில் போட்டி போட முடியும்.
புதிய சந்தைகள்
அமெரிக்காவின் வரிச் சுமையைக் குறைக்க, சமீபத்தில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்குப் பெரிய கைகொடுக்கும். அமெரிக்காவில் இழந்த நஷ்டத்தை ஐரோப்பியச் சந்தையில் 0% வரியின் மூலம் ஈடுகட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூரின் வாழ்வாதாரமான 10 லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைக் காக்க, இந்த பட்ஜெட் அறிவிப்புகள் காலப்போக்கில் வலிமையான அடித்தளத்தை அமைக்கும். வட்டி மானியம் மற்றும் மின் கட்டணச் சலுகை போன்ற கூடுதல் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால், திருப்பூர் மீண்டும் 'இந்தியாவின் டாலர் சிட்டி'யாக ஜொலிக்கும்.












Click it and Unblock the Notifications