திருப்பூரில் காலையிலேயே பொக்லைனுடன் போன அதிகாரிகள்.. கோயில் இடிப்பு.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 2.8 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயிலை வருவாய்த் துறையினர் அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அவர்களுடன் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சில போலீசார் கால் இடரி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஈட்டிவிரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபட்டி பகுதியில் 2.8 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகள் கொண்ட செல்வ முத்து குமாரசாமி திருக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கோயிலை அவிநாசி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர். சிவகுமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
இந்நிலையில்,இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்களிடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் வழக்குத் கொடுத்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010 -ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டபோது, இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோயிலை வருவாய்த் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.
கோயிலை அகற்றியது குறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில்.ஈடுபட்டனர்.இந்நிலையில் போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில போலீசார் கால் இடரி சாலையின் ஓரமிருந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியது.
தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சுவாமி சிலைகளை இந்து சமய அறநிலைத்துறைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications