'திமுக ஒரு குடும்பக் கட்சி.. ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்..' ஜேபி நட்டா அட்டாக்
திருப்பூர்: பாஜக மட்டுமே குடும்ப அரசியலுக்கு எதிரானது கட்சி என்று தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திருப்பூர் வந்துள்ளார்.
திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பாஜக மாவட்ட கட்சி அலுவலகங்களைக் காணொளி காட்சி மூலம் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

திருப்பூர்
இதையடுத்து திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், "பல சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டது இந்த திருப்பூர் மாவட்டம். திருப்பூர் குமரனை நினைவுகூர்கிறோம், சுதந்திரத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த வ.உ.சி போன்றோர் வாழ்ந்தது இந்த தமிழ்நாட்டில் தான். சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டில், திருப்பூரில் நடக்கும் செயற்குழுவில் கலந்துகொண்டதில் நான் பெருமையடைகிறேன்.

குடும்ப அரசியல்
திமுகவில் குடும்ப அரசியல் பல காலமாக உள்ளது. பாஜக மட்டுமே குடும்ப அரசியலுக்கு எதிரான கட்சி. பாஜக மக்கள் நலனுக்கான ஒரு கட்சி. தமிழ்நாட்டின் நலனுக்காக உழைப்பது பாஜக மட்டுமே. தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற திமுக முயல்கிறது. கொரோனா காலத்தில் திமுக அரசு கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. பாஜக போராட்டத்திற்கு பின்னரே அனுமதித்தது. வெற்றிவேல் யாத்திரையைத் தடுக்க பார்த்த தலைவர்களெல்லாம் இப்போது வேலோடு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

ஊழலும் திமுகவும்
திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இது ஒரு குடும்ப ஆட்சி. தி.மு.க.வை அவர்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாராலும் வழிநடத்த முடியாது. ஆனால் பா.ஜ.க.வில் மட்டுமே எளிமையான பின்னணியில் இருப்பவர்கள் முன்னேறவும் தலைவர்களாகவும் ஆக முடியும். அங்கு ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்காகக் கட்சி வேலை செய்கிறது. ஆனால் பாஜக மட்டும் தான் மக்கள், மாநிலம் மற்றும் தேசத்திற்குச் சேவை செய்கிறது.

பிரதமர் மோடி
தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாசாரத்துக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக என்றும் துணை நிற்கும். பிரதமர் மோடி தமிழை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றுள்ளார். கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது பல மாதங்கள் தீவிரமாகச் செயல்பட்டு தடுப்பூசி பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பை முற்றிலுமாக ஒழித்தவர் மோடி. தடுப்பூசி மூலம் லட்சக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்துள்ளார்.

கொரோனா வேக்சின்
எதிர்க்கட்சிகள் முதலில் அதனை மோடி ஊசி , பாஜக ஊசி என அச்சுறுத்தி பிரச்சாரம் செய்தனர். ஆனால் இப்போது அதை தான் அவர்களும் போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில்108 கோடி பேருக்கு மேல் இன்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர். விவசாய மேலாண்மைக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5990 கோடி ரூபாய் பிரதான் கிஷான் திட்டத்திற்காகத் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
பிரதமர் மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. அதேபோல திமுகவும் தான் கொடுத்த வாக்குறுதிப்படி குறைத்திருக்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யவில்லை. வைரஸ் தொற்றின்போது உணவு , மருந்து இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது என பாஜகவினர் உழைத்தனர். ஆனால் அப்போது திமுகவினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். 50 வருடத்திற்கு முன் சென்னை வெள்ளத்தின் போது கருணாநிதி வெள்ளத்தில் நின்றார். இன்று ஸ்டாலின் நிற்கிறார் ஒன்றும் மாறவில்லை.












Click it and Unblock the Notifications