திமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா
விவசாயிகளுக்காக திமுக என்ன செய்தது? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
திருப்பூர்: திமுகவும், காங்கிரசும் விவசாயிகளுக்காக இதுவரை என்ன செய்தார்கள்? ப. சிதம்பரத்திற்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும்? எதுவும் தெரியாது.. அவர் எப்படி வேளாண் சட்ட மசோதா குறித்து கருத்து சொல்வார்? இந்தியாவில் உள்ள விவசாயிகள், காங்கிரஸ் திமுகவில் உள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகள் தங்களது சொந்த காலில்நிற்க வேண்டும் என்பதற்காகவே, விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று எச்.ராஜா வேளாண் மசோதா குறித்து ஆதரவான கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.. அதில், அக்கட்சியின் தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்- இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனு
பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசும்போது, "மத்திய அரசு விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போதுள்ள சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வருவதை தடுக்க முடியாது.. அதனால், விளைபொருட்கள் வணிகம், வர்த்தகம் ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் சட்டத்தை மசோதா மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
ஆனால், உள்நாட்டில் விவசாயி தன் விளைபொருளை விருப்பப்பட்ட சந்தைக்கு எடுத்துச் செல்வது என்பதை எதிர்ப்பது ஏன்? இந்த சட்டத்தில், விவசாயிகள் நலனை பாதிக்கும் எதுவுமே இல்ல.. அப்படி பாதிப்புக்குள்ளாகும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன... குறைந்தபட்ச ஆதரவு விலை எந்த காலகட்டத்திலும் நீக்கப்படாது என்பதை பிரதமர் மோடியும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, சுயசார்பு இந்தியா திட்டம் மூலமாக விவசாய உள்கட்டமைப்பு வசதிக்காக, 1 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.. சுதந்திர இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவில் கட்டமைப்பு வசதிகளுக்காக இவ்வளவு நிதி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது... கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தினால் மட்டுமே விவசாயம் வளர முடியும்.
9 கோடியே 20 லட்சம் விவசாயிகளுக்கு, வருஷத்துக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், விவசாயிகள் தங்களது சொந்த காலில்நிற்க வேண்டும் என்பதற்காகவே, விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள்? இந்தியாவில் உள்ள விவசாயிகள், காங்கிரஸ் திமுகவில் உள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். ப. சிதம்பரத்திற்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாத நிலையில் வேளாண் சட்ட மசோதா குறித்து அவர் எவ்வாறு கருத்து சொல்வார்?" என்று கேள்வி எழுப்பினார்.