திமிர்' பிடித்த மோடிக்கு தொழிலாளர்கள், ஏழைகளின் வலிமையை புரிய வைப்போம்: திருப்பூரில் ராகுல் ஆவேசம்
திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர்; அவருக்கு தொழிலாளர்கள், ஏழைகளின் வலிமையை சக்தியை புரிய வைப்போம் என்று திருப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. கோவையில் பிரசாரத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி திருப்பூர் வருகை தந்தார்.
திருப்பூர் உரையாடல்
திருப்பூரில் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். தொழிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். இந்த உரையாடல் கூட்டத்தில் ராகுல் பேசியதன் தொகுப்பு: நாட்டில் நிலவும் வறுமையை அடியோடு ஒழிப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசு உங்களுக்கு தரும் நிதியானது நேராக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
பெண்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.
பெண்களுக்கு சம அந்தஸ்து தராத எந்த ஒரு நாடும் முன்னேறிய நாடாக இருக்க முடியாது. இந்தியாவை இன்று வழிநடத்திக் கொண்டிருக்கிறது பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க, பாசிச அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்கள் இணைய அனுமதி கிடையாது. தொடக்கத்தில் இருந்தே பெண்களுக்கு எதிரான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது. பெண்கள்தான் ஆண்களை விட விவேகமானவர்கள்.
மோடி மீது பாய்ச்சல்
நான் உங்களுடன் உரையாடுகிறேன்.. உங்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மோடி இதேபோல் செய்திருக்கிறாரா? நாட்டின் தொழிலதிபர்கள் 5 பேருக்காக மட்டுமே பிரதமர் பதவியில் மோடி அமர்ந்திருக்கிறார். அவர்களுடன்தான் ஆலோசனை நடத்துகிறார்.
மோடிக்கு புரிய வைப்போம்
இந்த தேசத்தின் விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், தொழில்துறையினருடன் ஒருபோதும் பிரதமர் மோடி உரையாடியதும் விவாதித்ததும் இல்லை. பிரதமர் மோடி திமிர் பிடித்தவர். இந்த தேசத்தின் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளகளின் வலிமையை, சக்தியை நாம் அவருக்கு புரிய வைக்க வேண்டும்.
டெல்லி போராட்டம்
விவசாய சட்டங்கள் என்பது நாட்டின் விவசாயிகள் மீதான பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக பார்க்கிறேன். டெல்லி எல்லையில் போராடுகிற விவசாயிகளை எண்ணி பெருமிதப்படுகிறேன். பிரதமர் மோடியை வெளியேவரவிடாமல் தடுத்து, விவசாய சட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்து வைத்துள்ளனர் விவசாயிகள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.