செந்தில்பாலாஜி vs அண்ணாமலை.. முற்றும் மோதல்.. 'மன்னிப்பு கேட்க முடியாது'.. அண்ணாமலை திட்டவட்டம்!
திருப்பூர்: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டு வருகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளனர் என்று தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால் அண்ணாமலையின் இந்த புகாருக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக மறுப்பு தெரிவித்து இருந்தார்.

செந்தில்பாலாஜி மறுப்பு
''கடந்த மாதம் 24-ம் தேதி முதல் இந்த மாதம் 19-ம் தேதி வரை நிலக்கரி பற்றாக்குறையால், சந்தையில் 397 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 397 மில்லியன் யூனிட்டில் 65 மில்லியன் யூனிட் மட்டுமே ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது பீக் ஹவரில் தேவைகளைப் பூர்த்திசெய்ய மட்டும் தான். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது நம்முடைய கொள்முதல் விலை மிகவும் குறைவுதான்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
மின் வாரியத்தில் முறைகேடு குறித்த ஆதாரம் இருந்தால் அண்ணாமலை 24 மணிநேரத்தில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் செந்தில்பாலாஜி கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினரகள்.

மன்னிப்பு கேட்கமாட்டேன்
இதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, '' மின்சாரத்துறை தொடர்பாக நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி சந்திப்பேன். தமிழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம். தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது.

பதில் சொல்ல வைப்போம்
முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கிறார். தினமும் ஒவ்வொரு விவகாரமாக வெளியிடுவோம். நிச்சயமாக இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை பதில் சொல்ல வைப்போம்'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications