காதல் திருமணம் செய்த பெண் ஆணவக் கொலையில் திடுக்கிடும் தகவல்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
திருப்பூர்: காதல் திருமணம் செய்த பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணவனிடம் இருந்து பெண்ணை பிரித்து பெற்றோருடன் பல்லடம் போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நெய்வவிடுதி கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஐஸ்வர்யா (21), ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகள் ஐஸ்வர்யா (19). இவரது பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்பவருடைய மகன் நவீன் (19). மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்தார்களாம். இந்த காதலுக்கு ஐஸ்வர்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே படிப்பை முடித்த இருவரும், திருப்பூரில் வந்து வேலை செய்ய தொடங்கி உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதிக்கு தங்கியபடி, திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் இருவரும் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந்தேதி நண்பர்கள் முன்னிலையில் காதலர்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார்கள்.. இதனை செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்குள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இது ஐஸ்வர்யாவின் பெற்றோரும் பார்த்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர், பல்லடம் வந்தனர். தனது மகளை காணவில்லை என பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காதல் தம்பதியை அழைத்து விசாரித்த பல்லடம் போலீசார், இருவரையும் பிரித்து பெற்றோருடன் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்திருக்கிறாரக்ள். ஊருக்கு சென்றவுடன் ஐஸ்வர்யாவை அவரது தந்தை கொலை செய்து , பிணத்தை யாருக்கும் சொல்லாமல் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டனர். இந்த விவகாரம் வெளியான நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பல்லடம் போலீசார் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை தன்னிடம் இருந்து பிரித்து பெற்றோருடன் அனுப்பியதாக இளைஞர் நவீன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார. இந்த வழக்கு தொடர்பாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும் சில போலீசாரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications