அம்மாவை இழந்து தவிக்கும் அமைச்சர் சாமிநாதன்! துயரத்தில் பங்கெடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
திருப்பூர்: செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.
வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே உடல் நலிவுற்ற நிலையில் இருந்த அமைச்சரின் தாயார் வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்திருக்கிறார்.
இதனிடையே அமைச்சர் சாமிநாதனின் அம்மா காலமான செய்தியறிந்து திருப்பூர் மாவட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்த திரண்டு வருகின்றனர்.
அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு.. பற்றி எரியும் ஆந்திர மாவட்டம்.. அமைச்சர் காருக்கு தீ வைப்பு!
செய்தித்துறை அமைச்சர்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர். விவசாயக் குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு அங்கு தென்னந்தோப்பு உட்பட விவசாய நிலங்கள் பூர்வீகமாகவே இருந்து வருகின்றன. அவற்றை கவனித்துக்கொண்டு அமைச்சரின் தாயார தங்கமணியம்மாள் முத்தூர் கிராமத்திலேயே வசித்து வந்தார்.
வயது மூப்பு
விவசாயப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட தங்கமணியம்மாள் ஊரில் இருந்து தோட்டத்துப் பணிகளை பார்த்துக்கொண்டார். சென்னை, திருப்பூர் என எந்த வெளியூர்களுக்கு செல்வதிலும் ஆர்வம் காட்டாதவர். 89 வயதான அவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு செய்தியறிந்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துயரத்தில் பங்கேற்கிறேன்
அதன் விவரம் வருமாறு, ''செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாயார் தங்கமணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறேன். தன்னை இத்தனை ஆண்டுகாலம் போற்றி வளர்த்த, தன் வளர்ச்சியைக் கண்டு உவகையும் பெருமையும் கொண்ட அருமைத் தாயாரை இழந்து நிற்கும் அமைச்சர் சாமிநாதன் அவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.''
முதல்வர் இரங்கல்
''அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் கூறியிருக்கிறார்.