திமுக தருவதாக சொன்ன 2 ஏக்கர் நிலம் என்னாச்சு… முதல்வர் கேள்வி
உடுமலைப்பேட்டை: விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் அராஜகம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
திமுகவினர் அராஜகம் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது; திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் என்றும் திமுக உள்ளவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தலைவன் எவ்வழியோ, அவ்வழியே தொண்டன் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, ஆட்சியில் இல்லாத போதே திமுக அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாக விமர்சனம் செய்தார். திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மரியாதையா பேசுங்கள்.. இல்லாட்டி காது சவ்வு கிழிந்துவிடும்.. ஸ்டாலினுக்கு முதல்வர் வார்னிங்!
அதிமுக அளித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக விளக்கமளித்த முதலமைச்சர் பழனிசாமி, 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறிய திமுக அதை செயல்படுத்தியதா? என்று கேட்டார். மக்களவையில் நுழைந்தவுடன் எங்களின் முதல் கோரிக்கை கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டமே என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சட்டமன்ற தேர்தல் என்றால் ஸ்டாலின் சொல்வதை ஏற்க முடியும், நடக்கவிருப்பது மக்களவை தேர்தல், எனவே வாக்குறுதிகளை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, நாட்டிலேயே அதிகமான விருதுகள் வாங்கியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.