ரிதன்யா சாபம்.. செல்போனில் சிக்கிய ஆதரம்! கவின் குடும்பமே தப்பிக்க முடியாது.. வக்கீல் சொன்ன தகவல்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சனைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ரிதன்யா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த இளம் பெண் ரிதன்யா என்பவருக்கும் கவின் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
திருமணமாகி இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்த நிலையில் மூன்றாவது வாரத்தில் இருந்து ரிதன்யாவிடம் கூடுதலாக 200 சவரன் தங்க நகைகளை பெற்றோரிடம் வாங்கி வர வேண்டும் என அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இருபது நாட்களுக்குப் பிறகு அவர்களது வீட்டுக்குச் சென்ற கணவர் கவின் ரிதன்யாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் கூட்டம் சாட்டினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூன்று பேரை கைது செய்தனர். இதற்கிடையே கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரும் ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார். மாமியார் சித்ராதேவி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு தனியாக இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிதன்யா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய வழக்கறிஞர் வழக்கறிஞர் சி.பி.சுப்ரமணியம்," திருமணமான 78 நாட்களில் ரிதன்யா உயிரிழந்துள்ளார். வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு ஆடியோ அனுப்பி உள்ளார். கணவர் மாமனார் மாமியார் சித்ரவதை தாங்க முடியாது என கூறி உள்ளார். அதன்படி கணவர் மாமனார் கைது செய்யப்பட்டனர். ரிதன்யா பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததை தொடர்ந்து சித்ரா தேவி கைது செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்த நாளே ஜாமீன் மனு வழங்கப்பட்டது. இதற்கு ரிதன்யா தந்தை எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு வழங்கி உள்ளார். அதனை ஏற்று ஜாமீன் மனு விசாரணை 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை உடற்கூறாய்வு சோதனை முடிவு வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கில் தேவையான நேரத்தை காவல் துறையினர் எடுத்துக் கொள்கின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணை முடிவு மற்றும் உடற்கூறாய்வு முடிவுகள் வரும் போது உரிய தீர்வு கிடைக்கும். சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆடியோ அடிப்படையில் வழக்கு மாற்றி பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications