நீங்க கருப்பு கொடின்னா.. நாங்க காவி கொடி.. என்ன இப்படி கிளம்பிட்டாங்க!
திருப்பூர் வரும் பிரதமரை காவி கொடியுடன் வரவேற்போம் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
திருப்பூர்: நீங்க கருப்பு கொடி காட்டி எதிர்த்தால், நாங்க காவி கொடி காட்டி பிரதமரை வரவேற்போம் என்று இந்து முன்னணி மதிமுகவுக்கு போட்டியாக அறிவித்துள்ளது.
இன்று திருப்பூருக்கு பிரதமர் மோடி வர உள்ளார். தமிழகத்திற்கு தொடர்ந்து பிரதமர் துரோகம் இழைத்து வருவதால் அவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்.
பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும், அது தன்னுடைய கடமை என்றும் ஏற்கனவே அறித்திருந்தார், அறிவித்தபடியே நடத்தியும் காட்டினார், இப்போதும் அறிவித்துள்ளார். திருப்பூர் பஸ் ஸ்டேண்டில் மதியம் இந்த எதிர்ப்பு போராட்டம் நடக்க உள்ளது.
கருப்புக்கொடி
அதேபோல, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை
இதில் 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்த போகின்றன. ஆனால் இவர்கள் இரண்டு தரப்புக்கும் போராட்டம் நடத்த போலீசார் எந்த அனுமதியும் தரவில்லை. தடையை மீறித்தான் போராட்டம் செய்யவிருக்கிறார்கள்.
காவிக்கொடி
வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தவுள்ள அதே இடத்தில், நாங்கள் காவி கொடி காட்டுவோம் என்றும், கருப்பு கொடி எதிர்த்தால், மோடியை காவி கொடி காட்டி வரவேற்போம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
போலீசார் குவிப்பு
இப்படி காவி கொடியும், கருப்பு கொடியும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்க உள்ளதால் நேத்து ராத்திரி முதலே திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் பிரதமர் வந்து திரும்பி செல்லும்வரை திருப்பூர் வருகை பதற்றமாக மாறியுள்ளது.