செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சிறப்பு.. திருப்பூரிலும் அசத்திய சுகன்யா சும்ரித்தி யோஜனா.. செம வட்டி
திருப்பூர்: பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஒருமித்த ஆதரவை இத்திட்டம் பெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.எஸ்.கே., அறக்கட்டளை சார்பில், 50 பெண் குழந்தைகளை, மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் விழா நடந்தது.
செல்வ மகள் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாகும்.. அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை நீங்கள் செலுத்த முடியும்..

கல்வி செலவு: உங்களது பெண் குழந்தை 18 வயதை நெருங்கும்போது, அவர்களது கல்வி செலவுக்காக, இதன் முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பெண்ணுக்கு 24 வயது ஆகும்போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை நீங்கள் மூடி விடலாம்.
பெண் குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை செல்வமகள் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் இணைய முடியும்.. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். ஒருவேளை, இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், விதி விலக்கு இருக்கிறது.
எங்கே துவங்கலாம்: தபால் நிலையங்களில், பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் இந்த திட்டத்தை தொடங்கலாம். பொதுத்துறை வங்கிகளான SBI போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம்.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் மட்டும், தமிழகத்தில் 32.57 லட்சம் புதிய கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.. இதன் மூலம் அகில இந்திய அளவில் 2வது இடத்தை இந்த திட்டம் பிடித்திருக்கிறது. அதனால்தான், தமிழகத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றன.
50 பெண் குழந்தைகள்: தற்போதுகூட, 50 பெண் குழந்தைகளை, மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் திட்டம் தமிழக மாவட்டங்களில் நடைபெற்றன.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையம் ஊராட்சியில், கே.எஸ்.கே., அறக்கட்டளை சார்பில், 50 பெண் குழந்தைகளை, மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் விழா நடந்தது.
பல்லடம் தபால் அலுவலக போஸ்ட் மாஸ்டர் சுரேஷ் தலைமை வகித்தார். கள்ளிப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். முன்னதாக, அறக்கட்டளை தலைவர் சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட, 50 பெண் குழந்தைகளுக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், 250 ரூபாய் செலுத்துவதற்கான ஆணைகளை வழங்கினார்
நிம்மதி தகவல்: இந்த வருடம் முதல் இத்திட்டத்தில் வட்டி குறைக்கப்படும் என செய்திகள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின... அதாவது கடந்த 1ம் தேதியே வட்டி குறைக்கப்படும் என்று மீடியாக்களில் செய்தி வெளியானது.. ஆனால், வரும் மார்ச் வரை செல்வ மகள் திட்டத்தில் மாற்றம் இருக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications