அதான் தேர்தலின் போதே திமுகவில் மதிமுக இணைந்தாச்சு.. இனி வாய்ப்பில்லை.. திருப்பூர் துரைசாமி பேட்டி
திருப்பூர்: மதிமுக இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை என கூறி திருப்பூர் துரைசாமி அக்கட்சியிலிருந்து விலகினார்.
மதிமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்து பலர் அக்கட்சியிலிருந்து போர்க்கொடி உயர்த்துகிறார்கள், பலர் வெளியேறுகிறார்கள். அந்த வகையில் மதிமுக நிர்வாகிகளில் முக்கியமானவர் திருப்பூர் துரைசாமி. இவர் அக்கட்சியின் அவைத் தலைவர் பதவியை வகித்தார்.

இந்த நிலையில் மதிமுகவை மீண்டும் திமுகவில் இணைத்து விடுங்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து துரை வைகோ டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவுடன் மதிமுகவை இணைக்க தொண்டர்களுக்கு இஷ்டம் இல்லை. கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கென தனி கொள்கை உள்ளது. துரைசாமி மூத்தவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என துரை வைகோ கூறியிருந்தார்.
இதுகுறித்து துரைசாமி கூறுகையில் துரை வைகோ சின்னப்பையன், நான் வைகோவின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்றார். இது குறித்து மீண்டும் துரை வைகோ கூறுகையில், மதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் துரைசாமியை நீக்குவது குறித்து ஜூனில் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் வைகோ பதில் அளிப்பார். துரைசாமி மீது நடவடிக்கை குறித்து யோசிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

ஜூன் 14 ஆம் தேதி மதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது திருப்பூர் துரைசாமியின் அவைத் தலைவர் பதவியை பறிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் துரைசாமி இன்றைய தினம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதிமுத இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கெனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முன்னணி தோழர்களை மதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய கூறிவிட்டனர்.
இதனால் அவர்கள் திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படியென்றால் நாம் ஏற்கெனவே திமுகவில் இணைந்து விட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக் கூடிய சூழல் இல்லை. வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. தற்போது நான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்குகிறேன். ஆனால் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை என துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications