அவிநாசியில் கடும் பனிப்பொழிவு.. நொடியில் விபத்துக்குள்ளான சொகுசு கார்.. மூன்று பேர் பரிதாபமாக பலி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கடும் பனிப்பொழிவு காரணமாக நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதியதில் 2 இளம்பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழை துவங்கியதில் இருந்தே உள் தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருவதோடு, மாலை நேரங்களில் தொடர்ந்து கன மழையும் பெய்து வருகிறது. காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் கடும் பனிமூட்டத்துடன் காணப்படுகிறது.

அவிநாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவி வந்த நிலையில் அவ்வழியாக வந்த சொகுசு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ஐஐஎம் இல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் ஹேமா கோவை தனியார் கல்லூரியில் பிஇ படித்து வருகிறார்.
கோவை, ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டைச் சேர்ந்தவர் மோனிஷ் பாபு 28, இவர் அபர்ணாவின் நண்பர். இவர்கள் மூன்று பேரும் கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கோவை நோக்கி நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை பழங்கரை பகுதியின் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அபர்ணா, ஹேமா, மோனீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அவிநாசி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநரான கோவை, கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரகுமான் கான் 24, என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, அவிநாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால், எதிரே செல்லும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. எனவே, வாகன ஓட்டிகள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications