திருப்பூரில் விஸ்வரூபமெடுத்த திருப்பரங்குன்றம் மேட்டர்.. இந்து முன்னணியின் அதிரடி அறிவிப்பை பாருங்க
திருப்பூர்: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் மதச்சார்பான சர்ச்சையை உருவாக்கியுள்ளது... தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றியிருக்கும் சூழலில், வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த நீதிமன்ற அவமதிப்பு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய அதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஹைகோர்ட்டில் நேற்று ஆரம்பித்தது..
திருப்பரங்குன்றம் வழக்கு
இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய2 பேர் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை ஆரம்ப கட்டமாக நடைபெற்ற நிலையில், மேலதிக விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், திருப்பரங்குன்றம் தொடர்பான நிகழ்வுகளுக்கு எதிராக இந்து முன்னணி கட்சி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையே வெளியிட்டுள்ளார்..
திமுக இந்து விரோத அரசு
அதில், "இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை கோர்ட்டிலேயே அப்பீல் செய்கிறது என்றால், அந்த துறையே கோவில்களை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை அழிக்கும் அமைப்பாக மாறிவிட்டது என்பதற்கான உதாரணம்தான் இது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி, அதிகாரம் எதுவும் நிரந்தரம் இல்லை. ஆயிரம் தடைகள் வந்தாலும், கடைசியில் நீதி வென்றே தீரும். நீதித்துறையை அவமதிக்கும் போக்கில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செயல்படுவதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
178 கோவில்கள்
இதனிடையே, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு காவல் துறையை வைத்து தடுப்பது இந்துக்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.. மனுதாரரும் தடுத்து நிறுத்தப்படுவது அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை 178 கோவில்கள் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டுள்ளன.. சிறுபான்மையினர் ஓட்டுக்காக மட்டும் இப்படி செயல்படுகிறார்கள்.. இந்துக்களை ஏமாளிகளாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என ஆளும் தரப்பு கருதுகிறது.
7ம் தேதி ஆர்ப்பாட்டம்
காவல் துறையும் கூலிக்காரர்கள் போல பயன்படுத்தப்படுகிறது.. இதையெல்லாம் கண்டித்துதான், வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... சட்டத்துறை அமைச்சர் தவறான தகவல்களை மக்களிடம் பரப்புகிறார்.
இந்த நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.. ஆனால் மற்ற மதங்களைப் போன்று இந்துக்களை அரசுகள் நடத்துவதில்லை" என்று கடுமையாக சாடினார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணை பாதையில் உள்ள நிலையில், அதன் அரசியல் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications