கிராம நிர்வாக அலுவலர் ஆனார் திருப்பூர் பெட்டிக்கடைக்காரரின் மகன்.. குரூப் 4 தேர்வால் விஏஓ பணி! சபாஷ்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பெட்டிக்கடைக்காரரின் மகன் குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்று, கிராம நிர்வாக அலுவலராகவும் பணி நியமனம் பெற்றுள்ளார். இதனால், ஒட்டுமொத்த திருப்பூர் மாவட்டமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.
எத்தனையோ கடினமான சூழ்நிலைகளை கடந்து, மாணவ, மாணவிகள் படித்து முன்னேறுகிறார்கள்.. தங்களது வறுமை நிலைமையிலும், படிப்பில் தீவிர கவனத்தை செலுத்தி, இலக்கை நோக்கி விடாமல் ஓடிக்கொண்டிருப்பதால், இளம்வயதிலேயே அரிய பதவிகளையும் வகிக்க முடிகிறது.

மகிழ்ச்சி: இதனால், அவர்களது குடும்பம் மட்டுமல்லாமல், அவர்கள் சார்ந்த பகுதியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.. அப்படித்தான், பல்லடத்தில் இன்று பூரிப்பு பெருகி காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், செட்டிபாளையம் ரோடு, கணபதி நகரை சேர்ந்த சாமிநாதன் - சாந்தி தம்பதியின் இளைய மகன் முகேஷ்... மிகவும் எளிமையான குடும்பத்தை சார்ந்தவர் முகேஷ்.. கணபதி நகரில் ஓட்டு வீட்டில்தான் கிராமத்து தம்பதியினருடன் வசித்து வருகிறார்.. முகேஷின் அப்பா சாமிநாதன், அந்த பகுதியிலேயே பெட்டிக்கடை வைத்துள்ளார்.. இந்த ஒரு வருமானத்தை நம்பியே அவர்களது மொத்த குடும்பம் உள்ளது..
அரசுப்பணி: சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் குரூப் - 4ல் தேர்வில் வெற்றி பெற்றார் முகேஷ்.. தன்னுடைய நண்பர்கள் வழிகாட்டுதலுடன் தயார்படுத்திக்கொண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் பங்கேற்றார்.. இறுதியில், குரூப் - 4 தேர்வில் 2வது முறையும் தேர்ச்சி பெற்றுள்ளார்..
இதையடுத்து, முகேஷூக்கு கவுன்சிலிங் நடந்தது.. இதில் பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கு தஞ்சை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடம் வழங்கப்பட்டது. இந்த பணியை இன்று ஏற்றுள்ளார் முகேஷ்.. வருவாய் துறையில் விஏஓ பணியிடம் பெற்றுள்ளார். அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று, இன்று உயர்பதவிக்கு சென்றுள்ள முகேஷூக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
தேர்ச்சி: குரூப் 4 மூலம், விஏஓ பதவி கிடைத்தாலும்கூட, குருப் 1, குரூப் 2 தேர்வுகளிலும் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் தற்போதைய ஒரே குறிக்கோளாக இருக்கிறதாம்..!!












Click it and Unblock the Notifications