"அப்பா போய்ட்டு வரேன்! வரதட்சணை கொடுமை தாங்க முடியல"! திருமணமான 78 நாளில் அவிநாசி பெண் தற்கொலை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும் நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது வரதட்சணையாக 300 பவுன் நகை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 300 பவுன் போதாது, 500 பவுன் வாங்கி வா என கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவை கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
பிறந்த வீட்டில்
இந்த கொடுமை குறித்து பல முறை தனது பிறந்த வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண் வீட்டார், கவின்குமாரை அழைத்து சமாதானம் பேசினர். இதையடுத்து இனிமேல் பிரச்சினை செய்ய மாட்டோம் என சொல்லி ரிதன்யாவை அழைத்து சென்றாராம்.
மகளுக்கு கொடுமை
மகளுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என பெண் வீட்டார் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல், கவின்குமார் குடும்பத்தினரின் பேராசைக்கு அளவே இல்லாமல் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர்.
காரை எடுத்து சென்ற ரிதன்யா
என்ன செய்வது என தெரியாமல் மனஉளைச்சலில் இருந்த ரிதன்யா, சம்பவத்தன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து அங்கு கவின்குமார் போன் செய்துள்ளார்.
ரிதன்யா வரவில்லை
ஆனால் அங்கும் ரிதன்யா வரவில்லை என சொல்லப்பட்டதால் கவின்குமார், ரிதன்யாவை தேடினார். அது போல் ரிதன்யாவின் குடும்பத்தினரும் தேடினர். அப்போது மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் இறந்த நிலையில் கிடந்தார்.
பூச்சி மாத்திரை
அவரது கையில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகள் இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த சேவூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமை
வரதட்சணை கொடுமையால் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். காரை எடுத்துக் கொண்டு சென்ற ரிதன்யா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் ஆடியோ மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
ஆடியோவில் பெண் கண்ணீர்
அந்த ஆடியோவில் மாப்பிள்ளை வீட்டார் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள். 3 பேரும் சேர்ந்து என்னை கடுமையாக சித்ரவதை செய்கிறார்கள். எனவே இந்த கொடுமையான வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. அதே வேளையில் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை, ஒருவனுக்கு ஒருத்திதான் என கண்ணீர் விட்டபடி தெரிவித்துள்ளார்.
கணவர் உள்பட 3 பேர் கைது
இதையடுத்து ரிதன்யாவின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பிறகு கணவர் கவின்குமார், மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது பெண் வீட்டார், ஆத்திரத்தில் மாப்பிள்ளை வீட்டாரை அடிக்க பாய்ந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அந்த 3 பேரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 300 பவுன் நகையையும் கொடுத்து தற்போது மகளையும் இழந்துவிட்டோமே என ரிதன்யாவின் பெற்றோர் கண்ணீர் விடுகிறார்கள். திருமணமாகி 2 மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications