கரூர் காவல் நிலைய ஏட்டு.. திருப்பூர் அருகே நள்ளிரவு சாலையில்.. இரவு முழுக்க ஒருவர் கூட பார்க்கலையே
திருப்பூர்: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூபதி தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து கார்வழி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மைல் கல் ஒன்று எமனாக மாறி உள்ளது. ஆனால் அவரை காலை வரை யாருமே கவனிக்கவில்லை.
நெடுஞ்சாலையில் நெடுந்தூரப்பயணங்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு எல்லா நேரமும் சரியாக இருப்பது இல்லை.. குறிப்பாக இரவு நேரத்தில் நெடுஞ்சாலை பயணங்கள் கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தி வருகின்றன. போதிய வெளிச்சமின்மை, சாலையில் உள்ள பள்ளங்கள், திடீரென சாலையில் கிடக்கும் மணல் மற்றும் கற்கள், பெரிய வாகனங்கள் முந்தி செல்வது, திடீரென ஆம்னி பேருந்துகளும், அரசு பேருந்துகளும் அவசரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளை சாலையில் இருந்து கீழேதள்ளிவிடுவது என பல சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 38 வயதாகும் பூபதி என்பவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பூபதி தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து கார்வழி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
வெள்ளக்கோவில் அருகில் உள்ள ஊடையம் பஸ் நிறுத்தம் அருகில் வளைவில் திரும்பிய போது திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சாலையோர மைல் கல்லில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்ட பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்ததால் விபத்து பற்றி யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் விபத்து பற்றி வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து போலீசார் விபத்தில் உயிரிழந்த பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு பூபதிக்கு இந்துமதி (33) என்ற மனைவியும், சிவபிரசாத் (10) என்ற மகனும், நேத்ரா (8) என்ற மகளும் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications