கல் குவாரி அனுமதியை ரத்து செய்க! தனி ஒருவனாக 2 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் விவசாயி!
திருப்பூர்: கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 2 நாட்களாக தனி ஒருவனாக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் விவசாயி விஜயகுமார்.
முறைகேடாக கல்குவாரி அனுமதி வழங்கிய அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடமும் அவர் புகார் கடிதம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விவசாயி விஜயகுமார் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

புகார் மனு
''திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையத்தில் முறைகேடாக இயங்கிவந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்காது ஆட்சேபனை மற்றும் ஆணையர் அவர்களின் நடவடிக்கை எடுக்கக்கூறிய உத்தரவை மீறி புதியதாக உரிமம் வழங்கியது தொடர்பாகவும், முறைகேட்டைக் கண்டறிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டியும், புகார் தரப்பட்டது.''

கல் குவாரி அனுமதி
மேலும், தற்போது வழங்கிய கல்குவாரி மற்றும் கிரசர் அனுமதியை ரத்து செய்ய வேண்டியும், முறைகேடாக கல்குவாரி அனுமதி வழங்கிய ஊழல் அரசு பணியாளர்கள் மீது மிக கடுமையான பணி நீக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டியும் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணத்தால் குடும்பத்துடன் இப்பகுதியில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'

2 நாட்களாக
விவசாயமும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மிகுந்த மன வேதனையடைந்து இக்கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை 30.08.2022 முதல் எனது விவசாய தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். ஆகவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு விவசாயி விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் சங்கம்
2 நாட்களாக விவசாயி விஜயகுமார் தனி ஒருவனாக தனது தோட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தும் நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடாங்கிபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications