நள்ளிரவில் கோரச் சம்பவம்.. திருப்பூர் அருகே நொறுங்கிய கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நள்ளிரவில் பொலேரோ காரும், வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். பழனியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் குடும்பத்தினர் பலியாகியுள்ளனர்.
திண்டுக்கல் முதல் கோவை வரை புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் இரு திசைகளிலும் செல்லும் வாகனங்களும் ஒரே சாலையில் பயணிக்க வேண்டி உள்ளது.

பழனியைச் சேர்ந்த தியாகராஜன் குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உறவினர் இல்ல துக்க நிகழ்வுக்கு பொலேரோ காரில் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
உடுமலை அருகே புறவழிச்சாலையில் கருப்பசாமிபுதூர் என்ற ஊருக்கு அருகே தியாகராஜன் குடும்பத்தினர் சென்ற பொலேரோ கார் மீது எதிரே வந்த டெம்போ டிராவலர் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், தியாகராஜன், அவரது மனைவி பிரீத்தி, மகன் ஜெயபிரியன், தாயார் மனோன்மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications