செந்தில் பாலாஜியை பார்க்கவே கஷ்டமா இருக்கு.. உடல்நலனோடு அவர் சீக்கிரம் வெளியே வரணும்: டிடிவி தினகரன்
திருப்பூர்: சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது செந்தில் பாலாஜியை பார்த்தால் வருத்தமாக உள்ளது. செந்தில் பாலாஜி நல்ல உடல் நலத்தோடு வெளியே வர வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை சென்னை புழல் சிறையில் தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. ஆறு மாத காலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவின் முன்னணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "செந்தில் பாலாஜி எனது பழைய நண்பர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே எங்களுடன் பயணித்தவர். அமமுகவிலும் என்னுடன் இணைந்து பயணித்துள்ளார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது. பாவம் அவர்.
சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல் நலத்தோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய டிடிவி தினகரன், "சில கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து நாங்கள் அறிவிப்போம். வன்னியர்களை ஏமாற்றியது போல எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிறுபான்மையின மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேடமெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுப் பேர்வழி என எல்லோருக்கும் தெரியும். தான் முதல்வர் பொறுப்புக்கு வர காரணமாக இருந்தவர்கள் முதுகிலேயே குத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியை தொடர உதவியாக இருந்தவர்கள் முதுகில் குத்தினார். அனைத்திற்கும் மேல் தங்களை பாதுகாத்தவர்கள் முதுகில் குத்தும் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்." என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications