திருப்பூரில் சுங்கச்சாவடியை திறக்க முயன்ற அதிகாரிகள்.. இடிக்க வைத்து ஆடிப்போக வைத்த பொதுமக்கள்
திருப்பூர்: திருப்பூரில் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி அலுவலக கட்டடத்தை பொதுமக்கள் போராட்டம் நடத்தி இடிக்க வைத்தனர். திருப்பூர் தெற்கு வட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திறக்க முயன்ற அதிகாரிகளுக்கு மறக்க முடியாத சம்பவத்தை திருப்பூர் மக்கள் நிகழ்த்தியுள்ளனர்.
திருப்பூர் தெற்கு வட்டம் தாராபுரம் சாலையில் அவினாசி முதல் அவினாசி பாளையம் வரை 32 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைக்காக வேலம்பட்டி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும் சுங்கச்சாவடியை இடிக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக அந்த சுங்கச்சாவடி கட்டி முடிக்கப்பட்டதில் இருந்தே இதுவரை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. அப்போது ஆவேசம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இரண்டு மாதங்களுக்கு முன்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை இடிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அப்போதும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சமாதானம் செய்து விவசாயிகளை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மீண்டும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சுங்கச்சாவடியைத் திறக்கவுள்ளதாகவும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார்கள்.. முன்னதாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுங்கச்சாவடியை அகற்ற பிறபிக்கப்பட்ட உத்தரவுகளை மீறி சுங்கச்சாவடி திறப்பதற்கான வேலை பணிகள் நடந்து வருவதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுங்கச்சாவடி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது பொதுமக்கள் கூறும் போது, வேலம்பட்டியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டடத்தை இடிக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஆறு கிராம மக்களுக்கும் திருப்பூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கழிப்பிட வசதிகளுடன் கூடிய லாரி நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியின் ஒரு பகுதி இடிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்து சுங்கச்சாவடி அலுவலக கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications