'டாலர் சிட்டி' திருப்பூரை காவு வாங்கப் போகும் 'பாலியெஸ்டர்' ஆடை உற்பத்தி- கைவிடும் வெளி மாநிலங்கள்!
திருப்பூர்: டாலர் சிட்டி என புகழின் உச்சியில் இருக்கும் திருப்பூர் தொழில் நகரத்துக்குதான் எத்தனை எத்தனை சோதனைகள்? பனியன் உற்பத்தி சார்பு பின்னலாடைத் தொழில்கள் நிறைந்த தொழில் நகரம் மெல்ல மெல்ல பாலியெஸ்டர் ஆடைகள் உற்பத்தி பக்கம் திரும்புவது என்பது டாலர் சிட்டி என்ற பெருமிதத்தையே காவு வாங்கக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
திருப்பூர் மிக சிறிய பகுதியாக இருந்தது ஒரு காலம்.. இன்று தனி மாவட்டமாக தமிழ்நாட்டின் அடையாளமாக மட்டுமல்ல.. வெளி மாநில தொழிலாளர்களை தாங்கு தாங்கு என தாங்கிக் கொள்ளும் தொழில் நகரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. திருப்பூரின் 'தமிழ்' முகமே மாறிப் போய் 'வட இந்திய' பெருநகரத்தின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கி உருமாறிக் கிடக்கிறது.

பின்னலாடை தொழில் கேள்விக்குறி: திருப்பூரின் முகம்தான் என்றில்லை..திருப்பூரின் அடிப்படையான பனியன் தொழிலே இப்போது கேள்விக்குறியாகும் வகையில் ஆட்டிப் படைக்கிறது பாலியெஸ்டர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள். திருப்பூரில் பனியன் ஆடைகள் உற்பத்திக்கு பிரதானமான பருத்தி நூல்தான். நூல் விலை உயர்வு, சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் பின்னலாடை உற்பத்தி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. பின்னலாடை ஏற்றுமதியும் பெருமளவு சரிவை சந்தித்தது. அத்துடன் வெளி மாநிலங்களில் பின்னலாடைகள் தொடர்பாக விருப்பம் குறைந்து பாலியெஸ்டர் பக்கம் திரும்புகின்றனர்.
பாலியெஸ்டர் ஆடைகள் கைகொடுக்கவில்லை: இத்தகைய நிலைமைகளால் பின்னலாடை உற்பத்தி செய்த நிறுவனங்கள் பாலியெஸ்டர் ஆடைகள் பக்கம் கவனத்தை செலுத்துகின்றன. இதனால் வெளி மாநிலங்களுக்கு சென்று பாலியெஸ்டர் துணிகளை வாங்கி வந்து திருப்பூரில் உற்பத்தி செய்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனாலும் வெளி மாநில ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைப்பது இல்லை.
வெளிமாநிலங்களில் பாலியெஸ்டர் ஆடைகள்: ஏனெனில் வெளி மாநிலங்களில்தானே பாலியெஸ்டர் துணிகள் கிடைக்கின்றன. அதை சுற்றிய பகுதிகளிலேயே பாலியெஸ்டர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வெளி மாநில தொழிலாளர்களை அங்கேயே பயன்படுத்தி இந்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் திருப்பூர் தொழில் நகரம் மிகப் பெரும் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
என்னதான் தீர்வு?: திருப்பூர் பின்னலாடை தொழிலுக்காக அதிநவீன இயந்திரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பு எல்லாம் வெளிமாநிலங்களில் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனாலும் வெளி மாநில ஆர்டர்கள் கிடைப்பது குறைவுதான். சரி இதற்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்? அதிநவீன இயந்திரங்கள் மூலமாக புதிய வடிவங்களில்பாலியெஸ்டர் ஆடைகளை தயாரிக்க வேண்டும்; விலையையும் கணிசமாக குறைத்தாக வேண்டும்; இன்னொரு பக்கம் திருப்பூர் தொழில் நகரத்தின் அடிப்படையான பின்னலாடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். அப்படி இருந்தால் பின்னலாடை பிளஸ் பாலியெஸ்டர் ஆடை உற்பத்தி என இரு துறைகளிலும் திருப்பூர் மாநகரம் கொடிகட்டிப் பறக்கும்.. சரி இதை யார் செய்ய வேண்டும்? திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களும் அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து ஆக்கப்பூர்வமான தீர்வை முன்வைப்பதுதான் இந்த டாலர் சிட்டியை பாதுகாக்க முடியும் என்கின்றனர் தொழில்துறை வல்லுநர்கள். உதாரணமாக பின்னலாடை துறைக்கு ஒரு தனிவாரியம் அமைத்து இத்துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம். உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications