தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சொகுசு கட்டணம்.. போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நவம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை மாலை, இரவு நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சொகுசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்றும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். கிட்டத்தட்ட 13 முதல் 15 லட்சம் பேர் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் தீபாவளி முடிந்து அனைவரும் செப்டம்பர் 13ம் தேதியான திங்கள் முதல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் சென்னை திரும்புவார்கள். பலரும் திங்கள் முடிந்து செவ்வாய்கிழமை காலை சென்னை திரும்புவார்கள் என்பதால் அன்றைக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து இயக்கப்படும். தாம்பரம், கிண்டி, திருவான்மியூர், அடையாறு, மைலாப்பூர், பாரிஸ் கார்னர் உள்பட சென்னையின் உள்பகுதிகளுக்கு சிறப்பு சேவைகள் இயக்கப்படும்.
இந்த சூழலில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நவம்ப 13 முதல் 15-ம் தேதி வரை மாலை, இரவு நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சொகுசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாக இயக்குநர் ஆல்பிஜான் வர்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக வரும் 13 முதல் 15-ம் தேதி வரை மாலை மற்றும் இரவுப் பணியில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் சொகுசு கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பு பேருந்துகளை இயக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
அதன்படி, உரிய வழித்தடப் பெயர் பலகையை சரிவர பொருத்தி பயணச்சீட்டுகளை 100 சதவீதம் அதிகப்படுத்தி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னைக்கு தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் போது, சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு வருவார்கள்.. அவர்களுக்காக 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் பேருந்துகளுக்கு சொகுசு கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இரவு பேருந்துகளில் இரட்டை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பயணிகளின் நலன் கருதி சொகுசு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications