பாம்பு பிடிப்பது போல.. பிரசவத்தின்போது குழந்தையை எடுப்பது போலவெல்லாம் செய்து பார்த்தோம்..விஜயபாஸ்கர்
குழந்தையை மீட்க போராடி வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
Recommended Video
மணப்பாறை: "குழந்தை சுஜித் விழுந்துள்ள போர்வெல் கிணற்றில் தற்போது மண் விழுந்திருக்கிறது.. அதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. பிரசவத்தின்போது குழந்தையின் தலையை பிடிச்சு வெளியே எடுப்பது போல, பாம்பு பிடிப்பது போல, என பலமுறைகள் மூலம் முயற்சி செய்தோம்.. எல்லாமே வீணாகி விட்டது.. விடிகாலையில் இருந்தே குழந்தை சத்தத்தை கேட்க முடியவில்லை.. இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது... குழந்தையை மீட்பது பெரும் சவாலாக இருக்கிறது.. முடிந்தவரை சிறுவனை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித் போர்வெல்லில் தவறி விழுந்துவிட்டான் என்ற தகவல் அறிந்ததுமே எஸ்.வளா்மதி, மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நேற்றிரவே சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்.
விடிய விடிய மீட்பு பணியினரின் நடவடிக்கைகளை கண்காணித்தபடியே இருந்தனர். மீட்பு பணிகள் குறித்த ஆலோசனைகளையும் தற்போதும் தந்து வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:
ஒருபக்கம் இஸ்ரோவின் சாதனையை கொண்டாடுகிறோம்.. மறுபக்கம் குழந்தையை மீட்க போராடுகிறோம் #savesijith
உபகரணங்கள்
"ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்கும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு சார்பில் செய்துதரப்படும். மருத்துவக் குழு, சம்பவ இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்து, உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்க மதுரையிலிருந்து சிறப்புக் கருவிகள் கொண்டு வரப்படுகிறது.
சுருக்கு கயிறு
ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், கவனமாக மீண்டும் கயிறை இறக்கி மீண்டும் குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தோம். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதையடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து மூன்றாவது முறையாக முயற்சி செய்தோம். மிகக்கடினமாகப் போராடி இரண்டாவது கையிலும் சுருக்குப் போட்டு கயிறை இறுக்கினோம். எப்படியும் வெளியே எடுத்துவிடலாம் என்று அப்போது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. ஆனால், மூன்றாவது முயற்சியும் பலனளிக்கவில்லை.
ஈரப்பதம்
ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெளியே எடுக்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழந்தையின் கையில் கயிறை இறுக்கி வெளியே எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக முதலாவதாகக் குழந்தையின் கையில் இறுக்கிய கயிறும் நழுவி, குழந்தை 70 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மீட்புப் பணியில் இது பின்னடைவை ஏற்படுத்தியது.
காமிரா
இதையடுத்து நாமக்கல்லை சேர்ந்த குழுவினர் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கொண்டுவந்திருந்த கருவியில் கேமரா, ஆக்ஸிஜன் செலுத்தும் வசதி, வெளியே எடுக்கும் கருவி இருந்தது. இதனால், நம்பிக்கையுடன் முயற்சி செய்தோம். அந்தக் கருவியை குழியில் 50 அடி ஆழத்துக்குக் கொண்டு சென்றவுடன் குழந்தை மூச்சுவிடும் ஓசையை எங்களால் கேட்க முடிந்தது.
ஐஐடி கருவி
அந்தக் கருவி 5 இன்ச் விட்டத்துடன் இருந்தது. பொதுவாகக் கிராமங்களில் போடப்படும் போர்வெல்கள் மேல்பகுதியில் 6 இன்ச் விட்டத்துடனும் கீழ்ப்பகுதியில் 4 இன்ச் விட்டத்துடனும் இருக்கும். இதனால், 5 இன்ச் விட்டம் கொண்ட அந்தக் கருவியால் 40 அடிக்கு மேல் கொண்டு செல்ல முடியவில்லை. சென்னை ஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட கருவி அது. அதன்மூலம் எப்படியும் மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. அதிகாலையில் இந்த முயற்சி பலனளிக்காமல் போனது. இதற்கிடையே, குழியில் மண் துகள்கள் குழந்தையின் மீது விழுந்தது. இது மிகப்பெரிய பின்னடைவாகி விட்டது.
சத்தமே இல்லை
பிரசவத்தின் போது குழந்தையின் தலையைப் பிடித்து வெளியே எடுப்பது போன்ற முறை, அதேபோல், பாம்பு பிடிப்பது போன்ற முறை என பலமுறைகள் மூலம் முயற்சி செய்துவிட்டோம். ஆனால், அந்தக் குழந்தையை வெளியில் எடுக்க முடியவில்லை. பின்னர் அதிகாலையில் அந்தக் குழந்தையிடம் இருந்து அழுகுரலையோ மற்ற எந்த சத்தமோ எங்களால் கேட்க முடியவில்லை. இது மிகப்பெரிய வேதனையை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது. இருப்பினும் அந்தக் குழந்தையை பத்திரமாக மீட்க முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
முயற்சிக்கிறோம்
சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது உணவு, தண்ணீரில்லாமல் கிட்டத்தட்ட 72 மணிநேரத்துக்கு மேல் சிக்கி தவித்தவர்களை நாம் உயிரோடு மீட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். முதல்வர் தகவல் கொடுத்ததை அடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இதுபோன்ற சூழல்களில் திறமையாக செயல்பட்டு 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அந்தக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். குழந்தையை பத்திரமாக மீட்க எல்லா வகையிலும் முயன்று வருகிறோம்'' என்றார்.