மணிகண்டன், டேனியல், ஸ்ரீதர்.. சிறுவன் சுஜித்தை மீட்க களமிறங்கிய 3 குழுக்கள்.. எடுத்த பல முயற்சிகள்
திருச்சி: திருச்சி அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணியில், மதுரையை சேர்ந்த விஞ்ஞானி மணிகண்டன் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த டேனியல் ஆகியோர் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது. ஆனால், அவர்கள் நடத்திய முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து கோவையிலிருந்து சென்ற ஸ்ரீதர் குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த குழுவிற்கும் பின்னடைவு ஏற்பட்டது.
Recommended Video
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் 30 அடி ஆழத்திலுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இன்று மாலை 2 வயது மதிக்கத்தக்க சுஜித் வின்சென்ட் என்ற குழந்தை விழுந்துவிட்டது.
இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கிணற்றுக்குள், ஆக்சிஜனை ட்யூப் மூலம் அனுப்பி அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மருத்துவ மீட்பு குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்ததும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழு தயாராக உள்ளது. வெற்றிகரமாக குழந்தையை மீட்போம் என்ற நம்பிக்கையோடு முயன்று வருகிறோம் என்றார்.
மதுரையைச் சேர்ந்த அறிவியலாளர் மணிகண்டன் என்பவர், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதற்கு ரோபோ மாதிரி, கருவியை உருவாக்கி அசத்தியுள்ளார். அவரது உதவியை தமிழக அரசு கேட்டது. எனவே அவர் இரவு 7.45 மணியளவில், அங்கே விரைந்து சென்றார். இதேபோல குழந்தை மீட்பு நிபுணரான நாமக்கல்லை சேர்ந்த டேனியலும், அங்கே வருகை தந்தார்.
ஆனால் மணிகண்டன் தயாரித்த கருவி அகலம் அதிகம். இந்த போர்வெல் கிணறு அகலம் குறைவு. எனவே, மணிகண்டன் மற்றும் டேனியல் இருவரும் இணைந்து, பைப்பில் கயிறு கட்டி, அதை சுஜித் கைகளில் கட்டி மேலே இழுக்க முயற்சி செய்தனர். அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது என்பதால் நிதானமாக, ஜாக்கிரதையாக அவர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். அதேநேரம், பல முறை முயற்சி செய்தும், குழந்தையின் மற்றொரு கையில் கயிறை மாட்ட முடியவில்லை. ஒரு கையில்தான் கயிறு மாட்டப்பட்டது.
எனவே, ஸ்ரீதர் குழு குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் ஸ்ரீதர் குழு வரும்போதே, சுஜித் கிணற்றில் விழுந்து, 5 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே, ஈரப்பதம் அதிகரித்ததால், சுஜித் உடலை நவீன கருவி கவ்வி பிடிக்க முடியவில்லை. எனவே, மீண்டும், கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் இக்குழுவினர் இறங்கினர்.
பிறகு அந்த முயற்சியை கைவிட்டு, ஜேசிபி மூலம் அருகேயுள்ள இடத்தில் பள்ளம் தோண்டி, மீட்பு படையினரை உள்ளே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்து தங்கள் பணியை நள்ளிரவு 1.40 மணியளவில் துவங்கினர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறையினர் அனுப்பிவைத்த கேமரா படம் எடுத்துள்ளது. சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் இருப்பதால் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.